2020 மகளிர் உலகக்கோப்பை
2020 டி20 மகளிர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றன.
அரையிறுதிப் போட்டிகள்
குரூப் ஏ-வில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, குரூப் பி-யில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற இருந்தது.
இந்தியா முன்னேறியது
சிட்னியில் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் நடைபெற இருந்தன. அதில் இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு முன் கடும் மழை பொழிந்தது. அதனால், போட்டி நடைபெற முடியாமல் போனது. விதிப்படி, குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல்
அடுத்து நடக்க இருந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது. அப்படி நடந்தால் குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிக்கு முன்றேரும் என்ற நிலை இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது சிக்கலாக இருந்தது.
ஆஸ்திரேலியா நிதானம்
எனினும், மழை நின்ற நிலையில் போட்டி துவங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. நிதான பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. மெக் லேனிங் 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
மீண்டும் மழை
அதன் பின் மீண்டும் மழை பெய்தது. அப்போது போட்டி தடை பட்டு இருந்தாலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என டிஎல்எஸ் விதிப்படி போட்டி மாற்றி அமைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
தென்னாப்பிரிக்க அணி முதல் 7 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்து 66 ரன்கள் எடுத்து வெற்றிக்கு 3 ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. எனினும், ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசியது. இறுதியில் 5 விக்கெட் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி டிஎல்எஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் சொதப்பி வெற்றி வாய்ப்பை இழந்தது.
இறுதிப் போட்டி
மார்ச் 8 மகளிர் தினத்தன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முதன் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதியில் ஆட இருக்கும் பலமான இந்திய அணியை சந்திக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.