கராச்சி: இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தொடரந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி பேச்சுவார்த்தை நடந்தால் நிச்சயம் இரு தரப்பு கிரிக்கெட் உறவும் மீண்டும் புதுப்பிக்கப்படும். இந்தியாவில் இரு நாட்டு அணிகளும் மோதும் வாய்ப்புகளும் உருவாகும் என்று முன்னாள் கேப்டன் முகம்மது அஸாருதீன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ஜியோ டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் அஸாருதீன். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிச்சயம் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதற்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தொடர்ந்து பேச வேண்டியது அவசியம்.
இதற்கு நிச்சயம் காலம் எடுக்கும். ஆனால் கண்டிப்பாக நடக்கும். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தால் இது சாத்தியமாகும் என்றார் அஸாருதீன்.
மேலும் அவர் கூறுகையில், இரு நாட்டு கிரிக்கெட் தொடருக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உண்மைதான். இதைச் செய்ய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தொடர்ந்து முயல வேண்டும். தொடர்ந்து பேச வேண்டும். பேசப் பேசத்தான் நல்லது நடக்கும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரி்க்கெட் போட்டிகளுக்கு எப்போதுமே இரு நாடுகளிலும் வரவேற்பு இருக்கும். இந்தத் தொடர்கள் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும், வீரர்களுக்கும் நலம் பயக்கும் என்றார் அஸாருதீன்.