வரலாறு சொல்வது என்ன?
இது போன்ற புகார்களை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தன் கருத்துக்களை கூறி இருக்கிறார். "1984-85 காலகட்டத்தில் டியூக் பந்துகள் (இந்தியாவில்) பயன்படுத்தப்பட்ட போது அந்த பந்தின் தையல் பகுதி விரைவில் சொரசொரப்பாக மாறி விடும். 1993இல் எஸ்.ஜி பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இந்தியா சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது" என வரலாற்றை சுட்டிக் காட்டினார் அசாருதீன்.
பந்துகளின் செயல்பாடுகள்
மேலும், நாடுகளின் வரிசைப்படி வெவ்வேறு பந்துகளின் செயல்பாடுகளை பார்த்தாலே எந்த பந்து சிறப்பாக இருக்கிறது என புரிந்து விடும் என கூறினார். அதன்படி, எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தும் இந்தியாவின் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் 58 "ஐந்து விக்கெட் ஹால்"கள் கிடைத்துள்ளன. இந்த தொடரின் பந்துவீச்சு சராசரி 23.45. டியூக் பந்துகள் பயன்படுத்தும் இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுன்டி தொடரில் 52 "ஐந்து விக்கெட் ஹால்"கள் மற்றும் 23.69 பந்துவீச்சு சராசரி உள்ளது. கூக்கபுர்ரா பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 25 "ஐந்து விக்கெட் ஹால்"கள் மட்டுமே கிடைத்துள்ளது. பந்துவீச்சு சராசரி 27.50. இதை வைத்தே எந்த பந்து நன்றாக வேலை செய்கிறது என கூறி விடலாம் என கூறுகிறார் அசாருதீன்.
விக்கெட்களுக்கு பின் குறை
மேலும், 6 விக்கெட்கள் எடுத்த குல்தீப் யாதவும், 10 விக்கெட்கள் எடுத்த உமேஷ் யாதவும் எப்படி எஸ்.ஜி பந்தை குறை கூறுகிறார்கள் என புரியவில்லை என்பதே அசாருதீனின் வாதம். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் அடித்துவிட்டு பிட்ச் சரியில்லை என கூறுவதை போல உள்ளது என சாடியுள்ளார் அசாருதீன்.
சவால் வேண்டும்
உலகம் முழுவதும் ஒரே பந்து பயன்படுத்தும் முறையும் சரியாக இருக்காது என தெரிவித்தார். காரணம், இந்தியா, இங்கிலாந்து சென்றால் அங்கே டியூக் பந்தை பயன்படுத்த வேண்டும். அதே போல, இங்கிலாந்து, இந்தியா வந்தால் எஸ்.ஜி பந்தை பயன்படுத்த வேண்டும். இந்த சவால் நிச்சயம் இருக்க வேண்டும் என கூறுகிறார் அசாருதீன்.