பனாஜி : முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் மகன் அசாதுதின் கோவா மாநில ரஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை எந்த முதல் தர போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பை பெறாத அவருக்கு கோவா ரஞ்சி அணியில் எப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டது என கோவா அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு விளக்கமளித்த கோவா மாநில கிரிக்கெட் அமைப்பின் செயலாளர், "அசாருதீன் மகன் அணியில் இருப்பதால், அசாருதீனின் வழிகாட்டுதல் இலவசமாக கிடைக்கும்" என்ற விசித்திரமான காரணத்தை கூறி இருக்கிறார்.
இந்த சர்ச்சை குறித்து பேசிய கோவா அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஷதாப் ஜகாதி, "ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரரின் மகன் என்பதற்காக அவர் கோவா அணியில் ஆடமுடியுமா? அவருக்கு வயது 28 ஆகிறது. அவர் ஒரு முறை கூட ரஞ்சி போட்டியிலோ, முதல் தர போட்டியிலோ ஆடியது இல்லை. ஏன், அவர் கடைசியாக மாநில அணிக்காக ஆடியது கூட 2009இல் தான். அதுவும் ஹைதராபாத் கோல்ட்ஸ் (கிளப்) அணிக்காக தான். அவர் உத்தரபிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் (கிரிக்கெட் அணியில்) நுழைய முயன்றார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை" என தன் ஆதங்கத்தை கூறினார்.
மேலும், "இது போன்ற முட்டாள்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதால் கோவா கிரிக்கெட்டை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். எங்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கும் படி ஆகிவிட்டது" என கூறினார். கோவா அணியில் மூத்த வீரர்களை பல்வேறு காரணங்கள் கூறி அணியில் இருந்து கடந்த வருடம் நீக்கி விட்டார்கள். அதில் ஜகாதியும் ஒருவர்.
இந்த குற்றசாட்டுகளுக்கு விளக்கமளித்த கோவா மாநில கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் தயா பாகி, "அசாதுதின், அசாருதீனின் மகன் என்பதால், அவர் அணியில் இருப்பதால், அசாருதீனின் இலவச வழிகாட்டுதல் கிடைக்கும். அசாதுதினுக்கு நாங்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அவர் இலவசமாக தான் ஆடுகிறார். எங்களுக்கு பணப்பற்றாக்குறை இருப்பதால் இந்த முடிவை எடுத்தோம்" என சமாளித்தார்.
அசாருதீன் தன் வழிகாட்டுதல்களை கோவா அணிக்கு இலவசமாக அளிப்பதாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.