இங்கிலாந்தில் துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று முதல் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.
பாபர் அசாம் குறித்து கேப்டன்
இன்று நடைபெறும் முதல் போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அணியின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் உலக அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் அசார் அலி பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் டெஸ்ட் தரவரிசையில் உயரங்களை தொடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டிலேயே நிரூபணம்
பாபர் அசாம் டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளநிலையில், முதலிடங்களில் உள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இணையாக அவர் தன்னை கடந்த ஆண்டிலேயே நிரூபித்து விட்டதாக அசார் அலி குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் அவர் சிறப்பாக தன்னை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி இன்றி விளையாட வேண்டும்
பாகிஸ்தான் அணியின் மிகவும் முக்கியமான வீரர் பாபர் அசாம் என்று கூறியுள்ள அசார் அலி, அவர் எந்த நெருக்கடியும் இன்றி தன்னுடைய ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆடவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல இளம் பௌலர் நசீம் ஷா மற்றும் ஷாஹின் அப்ரிடி ஆகியோரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.