இந்தியா vs பாகிஸ்தான்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பந்த் தவிர வேறு யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் பேட் செய்த பாகிஸ்தானுக்கு மிகச் சிறப்பான தொடக்க விக்கெட் பார்டன்ஷிப் கிடைத்தது. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.
வெற்றி
இதையடுத்து 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை நேற்று பாகிஸ்தான் எதிர்கொண்டது. அதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. பாக். அணியின் ஹரிஸ் ரவூப் அட்டகாசமாகப் பந்து வீசி 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். அதன் பிறகு பேட் செய்த பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களை குவித்தது. இந்த அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் க்ரூப் பி பிரிவில் பாக். முதல் இடத்தை பிடித்துள்ளது.
Recommended Video
பாபர் அசாம் பேச்சு
அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது பாகிஸ்தானுக்கு பிரகாசமாக உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் கூறுகையில், "வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி தான். இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள நம்பிக்கையை அடுத்து வரும் போட்டிகளுக்கு எடுத்துச் செல்வோம். எங்கள் அணியில் ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவுஃப் மிகச் சிறப்பாகப் பந்துவீசினர்.
அடுத்த இலக்கு
நாங்கள் தேவையின்றி அவர்களுக்குக் கூடுதலாக 10 ரன்களை கொடுத்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்தான். பேட்டிங் செய்த போது தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் சோயப் மாலிக் மற்றும் ஆசிப் அலியின் ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது தான். அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று அவர் தெரிவித்தார்.
வலுவான அணி பாகிஸ்தான்
இந்த தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், "ஆட்டம் கடைசி நேரத்தில் எங்கள் கையைவிட்டுச் சென்றுவிட்டது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மிகவும் வலுவான அணியாக உள்ளது. அவர்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த போட்டி
நியூசிலாந்து அணி தனது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அது குறித்து வில்லியம்சன் கூறுகையில், "இந்த போட்டியில் (பாக். எதிரான போட்டி) வெற்றியின் அருகில் வந்தது தோல்வி அடைந்துள்ளோம். எங்கள் ஆட்டத்தில் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆட்டத்தில் அதைச் சரி செய்ய முயல்வோம்" என்று குறிப்பிட்டார். நியூசிலாந்து அணி அடுத்து போட்டியில் இந்தியாவை வரும் 31ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.