2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் கெயில்
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் கடந்த 2019 மார்ச் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அந்த அணிக்காக பங்கேற்று விளையாடினார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தேசிய அணியில் இணைந்துள்ளார். தற்போது அவர் விளையாடவுள்ளது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில்.
நாளை துவக்கம்
நாளை ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக அணியில் இணைந்துள்ள அவர் இதற்கென தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடருக்காக 14 வீரர்களை கொண்ட அணியில் அவர் இணைந்துள்ளார்.
வெற்றி கொள்ள விருப்பம்
இந்நிலையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் தனது அணி வெற்றி கொள்ள வேண்டும் என்றும் இதன்மூலம் தான் 3வது கோப்பை வெற்றியை தனது கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய லட்சியமாக இது மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அணியில் இணைந்தது மகிழ்ச்சி
மேலும் தற்போதைய இலங்கைக்கு எதிரான தொடரையும் வெற்றி கொண்டு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.