சிரித்து.. சிரித்து சிறையிலிட்டாய்
ஜார்ஜ் பெய்லி. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் பெய்லி அணி வீரர்களிடம் எளிமையாக கலந்து பழக கூடியவர். மனான் வோக்ரா, சந்தீப் சர்மா, அக்சர் பட்டேல், கன்வீர் சிங் போன்ற இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஜொலிக்க இவரது கேப்டன்ஷிப் முக்கிய காரணம். பெய்லி 17 போட்டிகளில் மட்டைவீசி 257 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் மற்றும் லோவர் மிடில் ஆர்டரில் இறங்கியதால் போதிய அளவு இவரால் ரன்குவிக்க முடியவில்லை.
பவுலர்களின் ராஜா கம்பீர்
போட்டியின் தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு கிடந்த கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியை தூக்கி நிறுத்தியது கவுதம் கம்பீர்தான். அனுபவம் மிக்க கல்லீசுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராபின் உத்தப்பாவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்க செய்தபோது, கம்பீருக்கே அது எவ்வளவு முக்கியமான முடிவு என்பது தெரிந்திருக்காது. ஆனால் உத்தப்பாவின் ஆட்டம்தான் கொல்கத்தாவை பைனலுக்கு நகர்த்தி கொண்டு வந்தபோதுதான் அதை கம்பீர் உணர்ந்திருப்பார். கம்பீரை போல பவுலர்களை உரிய நேரத்தில் சரியாக பயன்படுத்திய கேப்டன் யாருமே இல்லை. கடைசி ஐந்து ஓவர்களில் கொல்கத்தாவின் பவுலிங்கை பிற அணிகள் அடித்து நொறுக்க முடியாமல்போனதற்கு அவர் சுனில் நரைனை சரியாக பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம்.
எப்படி இருந்த டோணி இப்படியாயிட்டாரே..
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணியை இந்த ஐபிஎல் வித்தியாசமானவராக பார்க்க நேர்ந்தது. முக்கியமான அரையிறுதி போட்டியில் 25 பந்தில் 87 அடித்த ரெய்னா அவுட் ஆனதும் டோணி களமிறங்காதது, பெங்களூருக்கு எதிரான முக்கியமான லீக் போட்டியில் கடைசி ஓவரை பகுதி நேர ஸ்பின்னர் டேவிட் ஹசியை வைத்து வீசச்செய்து தோற்றது, அரையிறுதியில் தோற்றதும் பொறுமையிழந்து வெளிநாட்டு வீரர்களை திட்டியது என டோணியின் 'கேப்டன்ஷிப் டச்' இந்த ஐபிஎல் சீசனில் மிஸ்சிங்.
மும்பையை மீட்ட ரோகித் ஷர்மா
ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த முதல் 5 போட்டிகளிலும் தோற்று தாயகம் திரும்பிய மும்பை இந்தியன்ஸ் அணியை மீட்டெடுத்து பிளே-ஆப் சுற்றுவரை விளையாட செய்த பெருமை கேப்டன் ரோகித் ஷர்மாவை சாரும். பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 390 ரன்களை குவித்தார்.
கடைசியில் காலை வாரிய வாட்சன்
ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் அவரது கேப்டன்ஷிப் திறமைக்காக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளவர்களில் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஓரளவுக்கு சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி நேரத்தில் 5 போட்டிகளில் 4ல் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. வாட்சனின் பேட்டிங்கும், பவுலிங்கும் அவரது திறமைக்கு குறைவானதாகவே இருந்தது. 13 போட்டிகளில் 240 ரன் மட்டுமே வாட்சனால் எடுக்க முடிந்தது.
இவர் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்
கேப்டன் என்ற முறையில் விமர்சனத்துக்கு ஆளான மற்றொருவர் ஷிக்கர் தவான். 14 போட்டிகளில் 377 ரன்கள் எடுத்தபோதிலும், அவரிடமிருந்து அணி நிர்வாகம் மேலும் எதிர்பார்த்தது. அபாயகர பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை ஓப்பனிங்கில் இறக்காமல் நடுத்தர வரிசையில் களமிறக்கியது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் தோல்விக்கு முக்கிய காரணம். வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான சமியை முழு நேர கேப்டனாக்கியிருந்தால் நிலைமை மேம்பட்டிருக்கும் என்பது ஹைதரபாத் ரசிகர்கள் கருத்து.
கவிழ்ந்த கப்பல் கேப்டன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி, கேப்டன் பொறுப்பால் இந்த சீசனில் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை காண்பிக்க முடியாமல் தவித்தார். இதை அவர் மறுத்தாலும், 14 போட்டிகளில் 349 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்துள்ளது கோஹ்லியின் கேப்டன்ஷிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அளவு கடந்த தன்னம்பிக்கையும் பெங்களூர் அணி தோல்விக்கு காரணம்.
கடைசியில் இருந்து முதலிடம்
டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கெவின் பீட்டர்சனும் கூட, ஷேன்வாட்சன், ஷிக்கர் தவான், கோஹ்லி போல விமர்சனத்துக்கு ஆளான மற்றொரு கேப்டன். சீசன் 7ல் கடைசி இடம் பிடித்த மோசமான பெருமையை டெல்லி பெற்றாலும் பெற்றது, பீட்டர்சன் மீதான ரசிகர்கள் கோபப்பார்வை அதிகரித்துள்ளது. 11 போட்டிகளில் விளையாடி 294 ரன்களை மட்டுமே பீட்டர்சனால் எடுக்க முடிந்தது.