மூன்று போட்டிகள்
இந்த நிலையில், இதுவரை நடந்த 16 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. சில போட்டிகளின் இடையே மழை பெய்தது. சில போட்டிகளின் மொத்த ஓவர்கள் டிஎல்எஸ் முறையில் மாற்றி அமைக்கப்பட்டன.
போட்டிக்கு முன்..
இன்று நடந்த வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையே ஆன போட்டி தான் மூன்றாவதாக கைவிடப்பட்ட போட்டி. இந்தப் போட்டிக்கு முன் இலங்கை அணியைக் காட்டிலும், வங்கதேச அணி வலுவாக இருப்பதால், எப்படியும் வென்று விடும் என கணிக்கப்பட்டது.
கடும் மழை
இந்த நிலையில் போட்டி நாளன்று காலை முதல் மழை கடுமையாக பெய்தது. ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டும், தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மைதான ஊழியர்கள் விடியற்காலை முதல் கடுமையாக உழைத்தாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால், போட்டி துவங்கவில்லை.
போட்டி கைவிடப்பட்டது
இந்த நிலையில், இந்திய நேரப்படி 6.20மணிக்கு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். மழை நீடித்ததும், ஒருவேளை மழை நின்றாலும், மைதானத்தை தயார் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகும் என்பதாலும், போட்டியை கைவிட்டனர்.
ஏமாற்றம்
இதனால், உலகக்கோப்பை போட்டியைக் காண ஆவலாக இருந்த பொதுவான கிரிக்கெட் ரசிகர்களும், வங்கதேச ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், இலங்கை அணி கொஞ்சம் நிம்மதியாக காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், பலவீனமாக இருக்கும் அந்த அணி போட்டியிலேயே ஆடாமல், புள்ளிகளை பெற்று வருகிறது.
இலங்கை அணியின் புள்ளிகள்
இந்தப் போட்டி கைவிடப்பட்ட நிலையில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை அணி இதற்கு முந்தைய போட்டியிலும் மழையால், போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி பெற்றது.
மோசமான பேட்டிங்
இலங்கை அணியின் பேட்டிங் மோசமான நிலையில் இருக்கிறது. இரண்டு, மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே அந்த அணியில் ஓரளவு ரன் சேர்த்து வருகின்றனர். அதனால், கவலையில் இருந்த அந்த அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஒவ்வொரு புள்ளிகளாக இரண்டு புள்ளிகள் சேர்த்துவிட்டது.
அதிர்ஷ்டம் இருந்தால்..
இனி வரும் போட்டிகளில் ஏதேனும் அதிசயம் நடந்தால் அந்த அணி சில வெற்றிகள் பெறும். அதிர்ஷ்டம் இருந்தால், இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கும் முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால், வங்கதேச அணி முன் எப்போதும் இருப்பதை விட இப்போது வலுவாக உள்ளது.
வங்கதேசம் வேதனை
தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் கூட, பந்துவீச்சில் அசத்தி 8 விக்கெட்கள் வரை வீழ்த்தி பலமான நியூசிலாந்து அணிக்கு கடைசி நேரத்தில் அழுத்தம் கொடுத்தது. இலங்கை அணியை வங்கதேசம் எளிதாக வீழ்த்தி இருக்கும். எனினும், மழை வந்து வெற்றியை பறித்து விட்டது. இதனால் வங்கதேசம் வேதனையில் உள்ளது.