காயம் வீரர்களின் பெரிய பிரச்சனை
வங்கதேச அணியில் முதல் போட்டியில் தமிம் இக்பால் காயம் ஏற்பட்டு முதல் போட்டியோடு விலகினார். காயத்தோடு ஆடி வந்த ஷகிப் அல் ஹசன் பாகிஸ்தான் உடனான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தொடரில் இருந்து விலகினார். தற்போது, அணியில் இருக்கும் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் கேப்டன் மொர்டாசா இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்கள் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இவ்வளவு காயங்களோடு, முக்கிய வீரர்கள் இல்லாத அணி இறுதி வரை வந்ததை நினைத்து இளம் வீரர்கள் பெருமை கொள்ள வேண்டும் என கூறுகிறார் கேப்டன் மொர்டாசா.
இந்திய அணியை வீழ்த்தும் வியூகம் என்ன?
இந்திய அணியை வீழ்த்த வங்கதேச கேப்டன் சொன்ன வியூகம் இதுதான். "களத்தில் ஏதாவது சிறப்பான நிகழ்வு ஏற்பட வேண்டும். அது ஒரு மிக சிறந்த பந்துவீச்சு பகுதியாகவோ, ஒரு வீரரின் மிகச்சிறந்த ரன் குவிப்பாகவோ இருக்கலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக முஷ்பிகுர் மற்றும் மிதுன் இணைந்து சிறந்த கூட்டணி அமைத்தனர். அது போல நிகழ வேண்டும். இதை விட்டால் இந்திய அணியை வீழ்த்த எளிதான வழி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என குறிப்பிட்டார்.
வங்கதேசத்திற்கு ஒரு ட்ராபி முக்கியம்
வங்கதேசம் இதுவரை பல நாடுகள் ஆடும் தொடரில் கோப்பை வென்றதில்லை. இது குறித்து பேசிய மொர்டாசா, "வங்கதேசத்திற்கு ஒரு கோப்பை அவசியம். கடவுளின் ஆசியால் ஒருநாள் வங்கதேசம் கோப்பை வெல்லும். இளம் வீரர்கள் அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்" என குறிப்பிட்டார்.
வாழ்த்து சொன்ன பிரதமர்
வங்கதேச அணி கடும் நெருக்கடிக்கு இடையே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார். இறுதியில் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்துமாறு அவர் உற்சாகம் அளித்துள்ளார். இந்தியாவுக்கு இன்று வங்கதேசம் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.