சூப்பர் 4-இல் என்ன குழப்பம்
பொதுவாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற பல நாடுகள் ஆடும் தொடர்களில் சூப்பர் 4, அரையிறுதி, காலிறுதி போன்ற ஒரு சுற்று இருந்தால், குரூப் சுற்றில் ஒரு அணி பிடிக்கும் இடத்தை வைத்து தான் அந்த அணி அடுத்து மோதும் போட்டிகள் முடிவு செய்யப்படும். இப்போது ஆசிய கோப்பையில், சூப்பர் 4 சுற்றுக்கு பதிலாக அரையிறுதி போட்டிகளில் இந்த நான்கு அணிகளும் மோதினால், குரூப் சுற்று புள்ளிப் பட்டியலில் இந்த அணிகள் பெரும் இடங்கள் அரையிறுதியில் எந்த அணியை சந்திக்கப் போகின்றன என்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், தற்போது சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளோடு மோதியே ஆக வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. எனவே, குரூப் சுற்றில் பெற்ற இடங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் அற்றவையாகவே இருக்கிறது.
அப்புறம் என்ன பிரச்சனை?
சூப்பர் 4-இல் அனைத்து அணிகளோடும் ஆடத்தான் போகிறார்கள் என்ற நிலையில், போட்டி அட்டவணை குரூப் சுற்று போட்டிகள் முடியும் முன்பே வெளியானதில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், போட்டி நடைபெறும் இடங்கள் தான் சிக்கல். போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது. இரண்டு நகரங்களுக்கும் 140 கிலோமீட்டர் தூரம் உள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரம் ஆகும். இந்தியாவோ தன் போட்டிகள் அனைத்தும் துபாயில் இருக்கும் வகையில் அமைத்துக் கொண்டுள்ளது. மற்ற நாடுகள் வெப்பம் அதிகமாக உள்ள சூழலில் இரண்டு நகரங்களுக்கும் ஓடி ஓடி போட்டியில் பங்கேற்க வேண்டும். இந்தியாவோ ஒரே நகரத்தில் இருந்து கொண்டு அங்கேயே அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும். இந்த பாகுபாடு தான் பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
மற்றொரு குழப்பம்
இந்த தொடர் தொடங்கும் முன்பு வெளியான அட்டவணையில், குரூப் பிரிவுகளில் முதல் இடம், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கான போட்டிகள் என சூப்பர் 4 அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது குரூப் "பி" பிரிவில் வங்கதேசம் இன்று ஒரு போட்டியில் ஆடுகிறது. அதற்கு முன்பே, அந்த அணி அதன் குருப்பில் இரண்டாம் இடம் பிடித்த அணியாக கருதப்பட்டு அட்டவணை தயாராகி உள்ளது. இது தங்கள் அணிக்கு பெரிய ஏமாற்றம் என வங்கதேச அணி கேப்டன் மொர்டாசா கூறியுள்ளார்.
பஞ்சாயத்தை கூட்டுமா பாகிஸ்தான்?
இந்த விஷயத்தில் ஏற்கனவே பாகிஸ்தான் கேப்டன் அவர்கள் அணியின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இது குறித்து போட்டியை நடத்தி வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விசாரிக்கும் என கூறியுள்ளார். இந்திய அணிக்கு மட்டும் என்ன தனி சலுகை என்பதே பாகிஸ்தான் வாதம். பிசிசிஐ தெரிவித்த விளக்கத்தில் போட்டி டிக்கெட்கள் விற்பனையை மையமாக வைத்தே இந்தியா துபாயில் மட்டும் ஆடும் வகையில் அட்டவணை இருப்பதாக கூறியுள்ளது.
பல நாடுகள் ஆடும் விளையாட்டுத் தொடர் என்றால், எல்லோருக்கும் எல்லாம் சமமாகத் தான் இருக்க வேண்டும்.