ஒப்புதல்
வங்கதேச கிரிக்கெட் போர்டு முதலில் எகிறினாலும், நேற்று நடந்த கூட்டத்தில் வீரர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், இந்திய கிரிக்கெட் தொடர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ரைக் அறிவிப்பு
கடந்த மூன்று நாட்கள் முன்பு யாரும் எதிர்பாராத வகையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் ஸ்ட்ரைக் அறிவித்தனர். வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தேசிய அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மக்மதுல்லா உள்ளிட்டோருடன் தேசிய அணி வீரர்கள், உள்ளூர் வீரர்கள் பெருங்கூட்டமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
முக்கிய கோரிக்கைகள்
தாகா லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பழைய முறைக்கு மாற்றப்பட வேண்டும், முதல் தர போட்டிகளில் வீரர்களுக்கு கூடுதல் சம்பளம், தேசிய அணியில் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், மைதான ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, கூடுதல் உள்ளூர் போட்டிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஸ்ட்ரைக் நடந்தது.
அதிகாரிகள் கோபம்
வங்கதேச கிரிக்கெட் போர்டு இயக்குனர்கள், அதிகாரிகள் இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். அவர்கள் ஊடகங்களை சந்தித்து இது சதித்திட்டம், பிளாக்மெயில் என்று கூறினர். இதுவரை எங்களிடம் யாருமே எதுவும் பேசவில்லை. நேரடியாக ஊடகங்களிடம் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என கூறினர்.
இந்திய தொடருக்கு சிக்கல்
இந்தியா - வங்கதேசம் மோதும் டி20 தொடர் நவம்பர் 3 அன்று துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது. அதற்கு முன் வீரர்கள் நடத்திய ஸ்ட்ரைக்கால் கிரிக்கெட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டது.
பிரதமர் வருகை
மேலும், மேற்கு வங்காளத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வர இருப்பதாக கூறப்பட்டது. வங்கதேச வீரர்கள் இதை எல்லாம் மனதில் வைத்து சரியாக காய் நகர்த்தி இருக்கிறார்கள் என கருதப்பட்டது.
சந்திப்புக்கு அழைப்பு
இந்த நிலையில், வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது கிரிக்கெட் போர்டு. வீரர்கள் தங்களுக்குள் பேசி பேச்சுவார்த்தைக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால், 11 கோரிக்கைகளுடன் கூடுதலாக இரண்டு கோரிக்கைகள் சேர்க்கப்பட்டன.
இரண்டு புதிய கோரிக்கைகள்
புதிய கோரிக்கைகளில் வங்கதேச கிரிக்கெட் போர்டின் வருமானத்தில் வீரர்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்றும், அனைத்து கோரிக்கைகளையும் மகளிர் கிரிக்கெட்டுக்கும் சேர்த்து அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
10 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்
இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் முதலில் கூறிய 11 கோரிக்கைகளை மட்டுமே இப்போது விவாதிக்க முடியும். புதிய 2 கோரிக்கைகளை பின்னர் விவாதிப்போம் என சமாளித்தது கிரிக்கெட் போர்டு. பின்னர், சம்பள உயர்வு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் மாற்றம் தொடர்பான 10 கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
பயற்சி ஆரம்பம்
முதலில் சதித்திட்டம், பிளாக்மெயில் என்றெல்லாம் கூறிய கிரிக்கெட் போர்டு தற்போது பெரிய எதிர்ப்பு இன்றி கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் தொடரை வைத்து, வீரர்கள் நடத்திய ஸ்ட்ரைக் தான் காரணம். தற்போது வீரர்கள் அக்டோபர் 25 முதல் இந்திய கிரிக்கெட் தொடருக்கான பயற்சியில் ஈடுபட உள்ளனர்.