ஸ்ட்ரைக் அறிவிப்பு
கடந்த இரு நாட்கள் முன்பு வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மக்மதுல்லா உள்ளிட்டோர் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பெரும் கூட்டத்துடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்ட்ரைக் அறிவித்தனர்.
கோரிக்கை
அவர்கள் 11 அம்ச கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர். அதில் சம்பள உயர்வு, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரை உரிமையாளர்கள் கொண்டு நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தது.
கிரிக்கெட் ஆட மாட்டோம்
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர். இந்த ஸ்ட்ரைக்கில் அண்டர் 19, அண்டர் 17 உள்ளிட்ட வயது சார்ந்த அணிகளின் வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை.
இந்திய கிரிக்கெட் தொடர்
மற்ற வீரர்கள் அனைவரும் ஸ்ட்ரைக்கில் குதித்ததால் உள்ளூர் முதல் தர போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம், வரும் நவம்பர் 3 முதல் இந்தியா - வங்கதேச டி20 தொடர் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கிரிக்கெட் போர்டு அதிர்ச்சி
இந்த திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் போர்டு எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இது குறித்து அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி வங்கதேச கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினர்.
சதித்திட்டத்தின் பின் யார்?
இந்த ஸ்ட்ரைக்கை சதியாகவே பார்க்கிறது வங்கதேச கிரிக்கெட் போர்டு. ஹாசன் என்ற கிரிக்கெட் போர்டு இயக்குனர் கூறுகையில், "இந்த சதியின் பின் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்போம்" என எச்சரிக்கும் விதமாக கூறினார்.
எங்களுக்கு தெரியாது
ஜலால் யூனுஸ் என்ற இயக்குனர் கூறுகையில், "கிரிக்கெட் வீரர்கள் இத்தனை கோபமாக, ஏமாற்றமாக இருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளை போர்டு முன் வைத்திருக்கலாம்" என்றார்.
பிளாக்மெயில்
மேலும், "அவர்கள் நேரடியாக ஊடகங்களை சந்தித்து தாங்கள் கிரிக்கெட் ஆடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். இது பிளாக்மெயில் தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை" என்று தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது சதித்திட்டம்
மற்றொரு அதிகாரி ஆனம் கூறுகையில், "வீரர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பின் பின்னே வேறு ஏதோ ஒரு காரணம் இருப்பதாக நம்புகிறேன். இது வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு எதிரான சதி" என்றார்.
அடுத்து என்ன?
தற்போது கிரிக்கெட் போர்டு அவசர இயக்குனர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இந்தியா - வங்கதேச தொடர் இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் விரைவான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.