கூட்டாக அறிவிப்பு
வங்கதேச அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பெரும் அளவிலான உள்ளூர் வீரர்கள் கூட்டாக இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
அதிரடி நடவடிக்கை
வங்கதேச கிரிக்கெட் போர்டு எடுத்து வரும் சில வினோதமான, அதிரடியான நடவடிக்கைகளை எதிர்த்தும், வீரர்களுக்கு ஏற்ற வகையிலான உள்ளூர் தொடர் மற்றும் அதிக சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தும் வங்கதேச வீரர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
மூல காரணம்
இந்த பிரச்சனைக்கு மூல காரணம், பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் தான். சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் போர்டு, ஐபிஎல் போல உரிமையாளர்களை வைத்து நடத்தப்பட்டு வந்த அந்த டி20 தொடரில் உரிமையாளர்களை நீக்கி விட்டு, இனி கிரிக்கெட் போர்டே, ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் போல நடத்தும் என அறிவித்தது.
அதிக சம்பளம்
மேலும், அந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு குறைந்த சம்பளம் நிர்ணயிக்கப்படதாக தெரிகிறது. இதைக் காட்டிலும் வினோதமான விதி ஒன்றை அமல்படுத்தியது வங்கதேச கிரிக்கெட் போர்டு.
அந்த விதி
அந்த டி20 தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஒரு லெக் ஸ்பின்னரை ஆட வைக்க வேண்டும் என்பது தான் அந்த விதி. இந்த விதியை பின்பற்றாத இரண்டு அணிகளின் பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
வீரர்கள் புகைச்சல்
இது போன்ற விசித்திர விதிகளும், வீரர்கள் சம்பளத்தில் இருந்த ஏற்ற, இறக்கங்களும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. முதல் டிவிஷனில் ஆடும் வீரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கிரிக்கெட் ஆட மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
மூத்த வீரர்கள் தலைமையில்..
தற்போது வங்கதேச தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட அனைவரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், மக்மதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் உள்ளிட்டோர் தலைமையில் உள்ளூர் அணி வீரர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
முக்கிய கோரிக்கைகள்
தாகா பிரீமியர் லீக் தொடரில் சம்பள உச்சவரம்பு இருக்கக் கூடாது, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாக உள்நாட்டு வீரர்களும் சம்பளம் வழங்க வேண்டும், அதிக உள்ளூர் தொடர்கள் வேண்டும், ஆகியவை அவர்களின் 11 அம்ச கோரிக்கைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்.
கிரிக்கெட் வளர்ச்சி
வீரர்களின் கோரிக்கைகளில் பல உள்ளூர் அளவில் கிரிக்கெட்டை வளர்க்கும் வகையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய தொடருக்கு முன் வீரர்களின் இந்த போராட்டத்தால் அழுத்தத்தில் உள்ளது வங்கதேச கிரிக்கெட் போர்டு.
இந்தியா தொடர்
இந்தியா - வங்கதேசம் மோதும் டி20 தொடர் நவம்பர் 3 முதல் துவங்க உள்ளது. அடுத்த வாரம் வங்கதேச வீரர்கள் இந்தியா கிளம்ப வேண்டும். அதற்குள் இந்த போராட்டம் முடிவுக்கு வருமா?