சீண்டல் பின்னணி
இந்த மோசமான சீண்டல் மற்றும் மோதலின் பின்னணி குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இருந்தது. அதற்கு பழி தீர்க்கவே, வங்கதேச வீரர்கள் இந்தப் போட்டியில் மோசமாக நடந்து கொண்டார்கள் என கூறப்படுகிறது.
இரண்டாவது ஓவரில் நடந்த சம்பவம்
இறுதிப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அப்போது இரண்டாவது ஓவரில் இந்திய வீரர் சக்சேனா பந்தை அடித்த பின், கிரீஸுக்கு வெளியே நின்றார். அப்போது பந்தை எடுத்து அவரது தலைக்கு அருகே எறிந்தார் வங்கதேச பந்துவீச்சாளர் ஹுசைன்.
வாக்குவாதம்
அப்போதே இந்திய ரசிகர்கள் அதை எதிர்த்து சலசலப்பை ஏற்படுத்தினர். சக்சேனா, ஹுசைனுடன் வாக்குவாதம் செய்தார். பின் அம்பயர் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பின் வங்கதேச பந்துவீச்சாளர்கள், இந்திய வீரர்களை சீண்டிய படியே இருந்தனர்.
எச்சரிக்கவில்லை
எனினும், அம்பயர் வங்கதேச வீரர்களை எச்சரிக்கை செய்யவில்லை. ஷோரிபுல் இஸ்லாம் என்ற வேகப் பந்துவீச்சாளர், இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில், 88 ரன்களில் அவுட் ஆன போது அவரை வழி அனுப்பி வைத்து சீண்டினார்.
ஷோரிபுல் இஸ்லாம் செயல்
அடுத்து வங்கதேசம் சேஸிங் செய்து வெற்றிக்கு அருகே வந்த போது, ஷோரிபுல் இஸ்லாம், இந்திய வீரர்களை சீண்டும் வகையில் பேசிக் கொண்டே இருந்தார். போட்டி முடிந்த பின் இரு அணிகளிடையே ஆன இந்த மோதல் இன்னும் மோசமான கட்டத்துக்கு சென்றது.
வெற்றி பெற்ற வெறி
வங்கதேச அணி வெற்றி பெற்ற பின் அந்த அணியின் வீரர்கள் களத்துக்கு ஓடி வந்தனர். அப்போது அவர்கள் வெற்றி பெற்ற வெறியில் இருந்தனர். இந்திய வீரர்கள் களத்தை விட்டு சென்று கொண்டு இருந்த அந்த நேரத்தில், ஒரு இந்திய வீரர், தன்னிடம் மோசமான வார்த்தைகளில் பேசிய வங்கதேச வீரரை கீழே தள்ளி விட்டார்.
அதிர்ச்சி
பின்னர், இந்திய அணி பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே தலையிட்டு அவரை சமாதானம் செய்தார். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் வீரர்கள் இது போல நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடந்த சம்பவம் பற்றி வங்கதேச கேப்டன் பேசினார்.
வங்கதேச கேப்டன் விளக்கம்
வங்கதேச கேப்டன் அக்பர் அலி கூறுகையில், என்ன நடந்ததோ அது நடந்திருக்கக் கூடாது. என் அணி சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில பந்துவீச்சாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்" என அவர் விளக்கம் அளித்து சமாளித்தார். இந்திய அணி மேலாளர் நடந்த சம்பவம் பற்றி பேசினார்.
மேலாளர் விளக்கம்
இந்திய அணி மேலாளர் அனில் பட்டேல் கூறுகையில், "எங்களுக்கு என்ன நடந்து என தெரியவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஐசிசி அதிகாரிகள் கடைசி சில நிமிடங்கள் என்ன நடந்தது என வீடியோ பதிவுகளை பார்க்க இருக்கிறார்கள். அதன் பின் அவர்கள் அது பற்றி கூறுவார்கள்" என்றார்.
மேட்ச் ரெப்ரீ மன்னிப்பு
மேலும், போட்டி முடிந்த உடன் இந்திய அணி நிர்வாகத்தை சந்தித்த மேட்ச் ரெப்ரீ நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார் அனில் பட்டேல். ஐசிசி இந்த விவகாரத்தை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறி உள்ளார்.