அங்கே இருக்க முடியாது
முதலில் டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு, ஒரு வாரம் மட்டுமே நடைபெறும் டி20 தொடரில் மட்டும் ஆடலாம் என எண்ணியது வங்கதேச கிரிக்கெட் போர்டு. ஆனால், ஒரு நாள் கூட பாகிஸ்தானில் இருக்க முடியாது என வங்கதேச அணியின் முக்கிய வீரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதல்
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வந்தது. அப்போது தீவிரவாதிகள் தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.
தடை விதித்தது ஐசிசி
அப்போதே ஐசிசி அமைப்பு எந்த அணியும் பாகிஸ்தான் செல்லக் கூடாது என தடை விதித்தது. பின்னர் நீண்ட காலம் கழித்து, ஐசிசி மற்ற நாடுகள் பாகிஸ்தான் செல்ல அனுமதி அளித்தது. ஆனால், எந்த அணியும் பாகிஸ்தான் செல்ல ஒப்புக் கொள்ளவில்லை.
பெரிய அணிகள் வரவில்லை
இடையே ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகள் பாகிஸ்தான் சென்றன. எந்த பெரிய அணியும் பாகிஸ்தான் செல்லாமல் தவிர்த்து வந்தன. பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் ஆட வேண்டிய அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடி வந்தது.
இலங்கை வந்தது
இந்த நிலையில், 2009இல் பாதிக்கப்பட்ட அதே இலங்கை அணியை 2019இல் தன் நாட்டில் கிரிக்கெட் ஆட வைத்தது பாகிஸ்தான் அணி. முதலில் இலங்கை அணி வர மறுத்தாலும், கெஞ்சிக் கூத்தாடி டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக நடத்தியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் நம்பிக்கை
பின் பாகிஸ்தான், சில நாட்கள் முன்பு இலங்கை அணியை வர வைத்து டெஸ்ட் தொடரையும் நடத்தி முடித்தது. அந்த நம்பிக்கையில் இனி அனைத்து அணிகளும் பாகிஸ்தான் வருவார்கள் என எண்ணியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
அச்சம்
ஆனால், அடுத்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டிய வங்கதேசம் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டி வருகிறது. வங்கதேச கிரிக்கெட் போர்டு ஒப்புக் கொண்டாலும், வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல அஞ்சி வருகின்றனர்.
வங்கதேச வீரர்கள் மறுப்பு
முதலில் டெஸ்ட் தொடருக்கு வர முடியாது, டி20 தொடரில் மட்டும் ஆடுகிறோம் என ஒப்புதல் அளித்து இருந்தது வங்கதேசம். எனினும், சமீபத்தில் சில முக்கிய வங்கதேச வீரர்கள், தங்கள் குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என தங்களை தடுப்பதாக தங்கள் கிரிக்கெட் போர்டிடம் கூறி உள்ளனர்.
ஒப்புதல் வழங்கவில்லை
இதற்கிடையே வங்கதேச அரசு இந்த கிரிக்கெட் தொடருக்கு இன்னும் முழு ஒப்புதல் வழங்கவில்லை. மறுபுறம், பாகிஸ்தான், வங்கதேசம் தயக்கம் காட்டி வருவதை வைத்து அவர்களை விமர்சித்து வருகிறது.
பாகிஸ்தான் புலம்பல்
வழக்கம் போல, இந்தியா தான் எல்லாவற்றுக்கும் காரணம் என சம்பந்தமே இல்லாமல் புலம்பத்துவங்கி உள்ளது பாகிஸ்தான். வங்கதேசம், பாகிஸ்தான் வர தயங்குவதற்கு இந்தியா கொடுக்கும் அழுத்தம் தான் காரணம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறி இருக்கிறார்.