சச்சின் டெண்டுல்கர் இரங்கல்
இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளராக ஆடிய பாபு நட்கர்னி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் அவரது அந்த சாதனை பற்றி கூறி தன் இரங்கலை பதிவு செய்து இருந்தார்.
21 மெய்டன் ஓவர்கள்
சச்சின் தன் பதிவில், "பாபு நட்கர்னி அவர்களின் மறைவை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசினார் என்ற சாதனையை பற்றி கேள்விப்பட்டுத் தான் வளர்ந்தேன்." என குறிப்பிட்டு இருந்தார்.
பிரமிக்கத்தக்க சாதனை
என்ன தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்களா? ஒரே போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் மொத்தமாக 21 மெய்டன் ஓவர்கள் வீசியதையே கடந்த 20 ஆண்டுகளில் பார்த்ததாக நினைவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து 21 மெய்டன் வீசினார் என்பது பிரமிக்கத்தக்க சாதனை.
சென்னை மண்ணில்..
அந்த சாதனையை அவர் சென்னை மண்ணில் தான் செய்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன் மாயாஜால இடது கை சுழற் பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார்.
அபார பந்துவீச்சு
அந்த சாதனை 1964 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அன்று முதல், இன்று வரை எந்த பந்துவீச்சாளரும் அவரது சாதனையை முறியடிக்கவில்லை. அந்தப் போட்டியில் அவர் 32 ஓவர்களில் 27 மெய்டன்கள் வீசி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.
பாகிஸ்தான் தொடர்
1960-61 டெஸ்ட் தொடரில் நட்கர்னியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மெய்டன்களாக ஆடியது பாகிஸ்தான் அணி. அந்த தொடரின் இரண்டு போட்டிகளில் 32 ஓவர்களில் 24 மெய்டன்கள், 23 ரன்கள் கொடுத்தும், 34 ஓவர்களில் 24 மெய்டன்கள், 24 ரன்கள் கொடுத்தும் மிரட்டி இருந்தார்.
பேட்டிங்கும் செய்வார்
பாபு நட்கர்னி பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 41 டெஸ்ட் போட்டிகளில், 67 இன்னிங்க்ஸ்களில் 1,414 ரன்கள் குவித்துள்ளார் ஒரு சதம், 7 அரைசதம் அடித்துள்ளார். அவரது சராசரி 25 ஆகும்.
பந்துவீச்சு எகானமி
பந்துவீச்சில் 65 டெஸ்ட் இன்னிங்க்ஸில் 88 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அவரது பந்துவீச்சு எகானமி 1.67 மட்டுமே. அவரது எகானமி மிகக் குறைவாக இருக்க காரணம், அவர் அதிக டாட் பால்கள் வீசியது தான்.
இந்திய அணிக்கு உதவி
1955 முதல் 1968 வரை கிரிக்கெட் ஆடிய அவர் அதன் பின் சுனில் கவாஸ்கர் ஆடிய காலத்தில் இந்திய அணியின் உதவி மேலாளராக பணியாற்றி பல யோசனைகளைக் கூறி, உற்சாகப்படுத்தி இந்திய அணிக்கு உதவி இருக்கிறார்.
சந்தீப் பாட்டில் நிகழ்வு
அவற்றைப் பற்றி நினைவு கூர்ந்த சுனில் கவாஸ்கர், பாபு நட்கர்னி எப்படி, முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் தன் சிறந்த டெஸ்ட் போட்டி ரன்களை அடிக்க காரணமாக விளங்கினார் என்பதை பற்றி கூறினார்.
அதிகபட்ச ரன்கள்
ஒரு போட்டியில் சந்தீப் பாட்டில் தலையில் காயமடைந்து அடுத்த போட்டியில் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார். அப்போது அவரை விளையாடுமாறு ஊக்கப்படுத்தி ஆட வைத்தார் நட்கர்னி. அந்தப் போட்டியில் தான் சந்தீப் பாட்டில் தன் சிறந்த ரன்களான 174 ரன்களை குவித்தார்.