பிரையன் லாராவுடன் உரையாடல்
ஸ்டம்பில் பந்து பட்டது டிஆர்எஸ் மூலம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பேட்ஸ்மேனுக்கு அவுட் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். டிஆர்எஸ் குறித்து மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாராவுடன் சச்சின் மேற்கொண்ட உரையாடலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
|
தொழில்நுட்பத்தை கொண்டு முடிவு
மைதானத்தில் செயல்படும் அம்பயரின் முடிவு திருப்தியளிக்காத நிலையில்தான் டிஆர்எஸ் முடிவு குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதனிடையே 3வது அம்பயரின் முடிவு தொழில்நுட்பத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒன்று அவுட் அல்லது நாட்-அவுட் அளிக்கப்பட வேண்டும் இதற்கு இடைப்பட்ட தீர்மானத்திற்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
சச்சின் அறிவுறுத்தல்
ஸ்டம்ப்பை பந்து முத்தமிட்டு அல்லது தொட்டுவிட்டு சென்றாலும் டிஆர்எஸ்ஸின் முடிவு பௌலர்களுக்கு சாதகமாகவே அளிக்கப்பட வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் எப்போதுமே 100 சதவிகிதம் சரியாக இருக்காது என்றாலும் மனிதர்களின் முடிவுகளும் அது போன்றதே என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங், பதான் ஆதரவு
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்த அறிவுறுத்தலுக்கு முன்னாள் வீரர் இர்பான் பதான் மற்றும் ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சச்சினின் இந்த கருத்து 1000 சதவிகிதம் உண்மையானது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஸ்டம்பை பந்து லேசாக தொட்டாலும் அவுட் அளிக்கப்பட வேண்டும் என்று அவரும் கூறியுள்ளார்.