லாகூர்: எனது தூஸ்ரா வகை பந்து வீச்சை இன்னும் பல பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை என்பது திருப்தியாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சையது அஜ்மல் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டு, அடுத்து இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக அஜ்மல் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
திறமை முடியவில்லை
லாகூரில் அஜ்மல் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு சில போட்டிகளில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால் அவரது திறமை முடிந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. மீண்டும் திறம்பட விளையாட அந்த வீரரால் முடியும். எனது பந்து வீச்சை புரியாத புதிராகத்தான் பேட்ஸ்மேன்கள் பார்க்கிறார்கள். அந்த புதிர் இன்னும் விலகவில்லை என்று கருதுகிறேன்.
கணிக்க முடியாது
எனது தூஸ்ரா வகை பந்து வீச்சுதான் புதிருக்கு காரணம். பல பேட்ஸ்மேன்கள் எனது பந்து வீச்சை கணிக்க முற்பட்டாலும் இன்னும் அவர்களால் முடியவில்லை. நான் தூஸ்ரா வீசுவேன் என்று பேட்ஸ்மேன்கள் தெரிந்து வைத்திருந்தாலும்கூட இன்னமும் என்னால் அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது என்று நினைக்கும்போது திருப்தியாக உள்ளது.
விக்கெட்டுக்கான பசி
எனது பந்து வீச்சை முழுமையாக கணிக்க இதுவரை எந்த பேட்ஸ்மேனும் கிடையாது. இதுதான் எனது வெற்றிக்கான காரணம். நீண்ட நேரம் தொடர்ந்து பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. விக்கெட்டுக்கான பசி எனக்குள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
உலக கோப்பைக்கு தயார்
இங்கிலாந்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ள நான் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். உலக கோப்பைக்கு என்னை முழு அளவில் தயார்படுத்திக்கொண்டுள்ளேன். இவ்வாறு அஜ்மல் தெரிவித்தார்.