இந்தியா படுதோல்வி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் துவக்கத்திலேயே இந்தியா நியூசிலாந்திடம் படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பௌலிங்கை தேர்ந்தெடுக்க, மைதானத்தில் நிலவிய கடுமையான காற்று உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவால் போதிய ரன்களை எடுக்க முடியாமல் போனது. இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ரன்களே அதிகமாக இந்தியாவால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் நியூசிலாந்து எளிதாக வெற்றி அடைந்துள்ளது.
முதல் முறையாக தோல்வி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா 360 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. சொந்த மண்ணில் இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தன்னுடைய முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்த இந்திய அணி, தற்போது முதல்முறையாக நியூசிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.
டாஸ் தோல்வியே காரணம்
இந்நிலையில், இந்தப் போட்டியில் தோற்றபின்பு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, போட்டியில் டாசில் தோல்வியுற்றது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியுள்ளதாக தெரிவித்தார். டாசில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், தற்போது, நிலைமையே தலைகீழ் ஆகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌலர்களுக்கு 'டப்' கொடுக்கவில்லை
இந்திய அணியின் பேட்டிங்கும் போதிய அளவில் சிறப்பாக அமையவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து வீரர்களுக்கு நமது ஆட்டக்காரர்கள் போதிய அளவிற்கு நெருக்கடியை அளிக்கவில்லை என்றும் முதல் இன்னிங்சில் 220 முதல் 230 வரை ரன்கள் எடுத்திருந்தால், ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்டத்தை மாற்றிய 3 விக்கெட்டுகள்
தொடர்ந்து பந்துவீசிய இந்திய பௌலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக விராட் கோலி தெரிவித்தார். 225 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், எதிரணியின் இறுதி 3 வீரர்கள் 123 ரன்களை குவித்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளதாகவும் விராட் கூறினார். இதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
விராட் கோலி ஆதரவு
இந்த டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சிறப்பாக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில், பிரித்வி சர்வதேச அளவில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் விராட் கூறினார். மேலும் இந்த போட்டியில் மயங்க் அகர்வால் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
விராட் கோலி உறுதி
இந்நிலையில், இந்தப் போட்டியின் தோல்வி, பேட்டிங்கில் இந்தியா தன்னுடைய திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை புலப்படுத்தியுள்ளதாகவும் விராட் கோலி குறிப்பிட்டார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், வரும் சனிக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டாவது டெஸ்ட் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற்று தொடரை சமனாக்க இந்தியா தீவிரமாக உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.