இலங்கை வீரர்கள் காயம்
பாகிஸ்தானில் கடந்த 2009ல் இலங்கை அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 7 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.
சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் எந்த நாடும் கிரிக்கெட் விளையாட சம்மதிக்காததால், அங்கு சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறாமல், கிரிக்கெட் உலகிலிருந்து அந்நாடு தனிமைப்பட்டது.
இலங்கை அணி மீண்டும் சுற்றுப்பயணம்
இந்நிலையில், கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
வங்கதேசத்திற்கு அழைப்பு விடுப்பு
இந்நிலையில் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து தங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டிகளை விளையாட வங்கதேசத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
வங்கதேச கிரிக்கெட் போர்டு உறுதி
இதுகுறித்து கடந்த வாரத்தில் கருத்து தெரிவித்திருந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தொடரில் பங்கேற்க தங்களது வீரர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்திருந்தது.
வீரர்கள் பயப்படுவதாக விளக்கம்
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அதிக நாட்கள் தங்கியிருக்க தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்ல வீரர்கள் அச்சம்
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்கள் அங்கு செல்ல அச்சம் தெரிவித்து அங்கு செல்ல வேண்டாம் என்று வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிசிபி உறுதி
ஆனால் பாகிஸ்தானில் சர்வதேச டி20 தொடரில் பங்கேற்க வங்கதேச அணியினர் தயாராக உள்ளதாகவும், பாகிஸ்தான் உறுதி அளித்தால் அதுகுறித்து அரசிடம் அனுமதி வாங்கப்படும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிசிபி நம்பிக்கை
பாகிஸ்தானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஆனால் போகும் இடமெல்லாம் பாதுகாப்புடனேயே சென்றால், வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிசிபி அறிவிப்பு
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பிசிபி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து வரும் காலங்களில் யோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.