பயோ பபுள்
இந்திய அணி வரும் மே.2ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. நேரடியாக அங்கு சென்றால் 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும், மேலும் பயிற்சியில் ஈடுபடமுடியாது. இதனால் இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக வீரர்கள் அனைவரையும் மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பின்னர் இங்கிலாந்து சென்றால் அங்கு 10 நாட்கள் மற்றும் குவாரண்டைனில் இருந்து பயிற்சி மேற்கொள்ளலாம்.
புதிய திட்டம்
இதனால் வீரர்கள் மும்பைக்கு வருவதற்கு முன்னதாகவே, அவர்களின் வீட்டிற்கு மருத்துவக்குழுவை அனுப்பி பிசிசிஐ கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அவற்றின் முடிவுகளில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் பிசிசிஐ -ன் பபுளில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதுவும் மே 19ம் தேதியன்று அனைத்து பரிசோதனைகளையும் முடித்த முடிவுகளுடன் மும்பைக்கு வந்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீண்ட தொடர்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே இந்திய வீரர்கள் சுமார் 3 மாதங்கள் அங்கு முகாமிட வேண்டும் என்பதால் குடும்பத்தாரும் அவர்களுடன் இங்கிலாந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்பத்தாருக்கும் 3 முறை வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு இங்கிலாந்து செல்லவுள்ளனர். அவர்களுக்கான 2ம் கட்ட தடுப்பூசியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றால் இந்தியாவில் இருந்தே தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படவுள்ளது.