மே மாதத்தில் நடத்த திட்டம்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மனியில் புகழ்பெற்ற பண்டஸ்லிகா கால்பந்து லீக் தொடர் வரும் மே மாதத்தின் துவக்கத்தில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மூடிய மைதானங்களில் தொடர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரும் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மூடிய மைதானங்களில் தொடர்களை நடத்தும் வாய்ப்பு குறித்தும் பிசிசிஐ உள்ளிட்டவை திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், தற்போது மூடிய மைதானங்களில் போட்டிகளை நடத்தும் எண்ணமில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
சவுரவ் கங்குலி திட்டவட்டம்
ஜெர்மனி மற்றும் இந்தியாவின் சூழல்கள் வித்தியாசமானவை என்றும், தற்போது இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் எண்ணமில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கங்குலிக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு
இதனிடையே, பொதுவெளிகளில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என்று சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விமானநிலையங்கள், ஹோட்டல்கள், மைதானங்களின் வெளிப்புறங்கள் போன்றவற்றில் ஐபிஎல் வீரர்கள் வரும்போது, அவர்களை பார்க்க வரும் ரசிகர்களை சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐஎப்எப் துணை தலைவர்
ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகளை நடத்தினாலும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மைதானத்தில் அனுமதித்தே தீரவேண்டும் என்று தெரிவித்துள்ள அனைத்து இந்திய கால்பந்து பெடரேஷன் துணை தலைவர் சுப்ரதா தத்தா, அவ்வாறு இருக்கும்போது அதில் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் கால்பந்தாட்ட கேப்டன்
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவிற்கு மட்டுப்படும் நிலையில், காலி மைதானங்களில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தலாம் என முன்னாள் கால்பந்தாட்ட கேப்டன் பாய்சங் பூட்டியா ஆலோசனை தெரிவித்துள்ளார். தற்போது தொலைக்காட்சிகளில் நேரலை நிகழ்ச்சிகள் இல்லாத நிலையில், இதன்மூலம் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.