மும்பை: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இன்று நிச்சயம் மகிழ்ச்சியான நாளாக தான் இருக்க முடியும். ஏனெனில், வெளியாகி இருக்கும் அறிவிப்பு அப்படி.
இந்திய கிரிக்கெட் வாரியம், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பது நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும். ஆனால், இந்த பணம், பேர், புகழ் அனைத்தும் இந்திய அணியில் இடம் பிடிப்பவர்களுக்கு மட்டுமே.
உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுபவர்களில் பலர், இன்னமும் பேருந்தில் ஏறி தான் ஸ்டேடியம் வந்தடைகின்றனர். சிலர் தங்களது கிரிக்கெட் Kit-களுடன் நடந்து செல்லும் நிலையில் இன்றும் இருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் பாடுபட்டு இந்திய அணி வரை முன்னேறி தங்களை நிரூபித்தால் தான் பணம், பேர், புகழ், அந்தஸ்தெல்லாம். அதுவரை அவர்களது நிலைமை மிக மிக ஆவரேஜாகவே இருக்கும். பலரும் இன்றும் பார்ட் டைம் வேலைப் பார்த்துக் கொண்டு தான் உள்ளூர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் கிரிக்கெட் விளையாடும் எந்த நாடாக இருந்தாலும், உள்நாட்டு கிரிக்கெட் தான் அஸ்திவாரம் போன்றது. இப்போதுள்ள 2k கிட்ஸுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமெனில், சச்சின் தொடங்கி, விராட் கோலி வரை அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி, அதில் தங்களை நிரூபித்து, பிறகு இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சியவர்களே. ஒரு நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு சரியாக இல்லையெனில், எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும், திறமையான வீரர்கள் கிடைக்காமல் ஒருக்கட்டத்தில் அல்லல்பட வேண்டியிருக்கும்.
இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இப்போது இந்த சிக்கலால் தான் அல்லாடி வருகின்றன. 2013க்கு பிறகு, திறமையான இளம் வீரர்களை கண்டறிய ஆஸ்திரேலியா தொடர்ந்து திணறி வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு வரை உலகின் சக்திவாய்ந்த கிரிக்கெட் அணியாக இருந்த ஆஸ்திரேலியா, இன்று 'பழைய பன்னீர்ச்செல்வம்' எனும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறது. இதில், எப்போதும் நிலையாக இருப்பது இந்திய கிரிக்கெட் சங்கம் மட்டுமே. இங்கு திறமைசாலிகளுக்கும், இளைஞர்களுக்கும் பஞ்சமே கிடையாது. போதாத குறைக்கு ஐபிஎல்-லும் "உள்ளேன் ஐயா" என்று ஆஜராக, இப்போதெல்லாம் நேஷ்னல் அணிக்கு தேர்வாக வேண்டுமெனில், ஐபிஎல் தொடரில் பெர்ஃபாமன்ஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நினைத்ததை முடித்த பிசிசிஐ.. ஐபிஎல்-ல் இங்கிலாந்து வீரர்கள்..
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவின் அறிவிப்பு உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இன்று சற்று மன நிறைவை அளித்துள்ளது. அதாவது உள்நாட்டு கிரிக்கெட் (domestic cricket) போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக அவர் இன்று அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள சீனியர் வீரர்களுக்கு 60,000 ரூபாயும், 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 25,000 ரூபாயும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.