டெஸ்ட் சாம்பியன்ஷிப்
கடந்த 2019ம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நம்பிக்கையுடன் நியூசிலாந்தையும் எதிர்கொள்ள இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் வீரர்களின் தேர்வும் நடைபெற்று வந்தன.
இந்திய அணி
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு மொத்தமாக 24 பேர் கொண்ட அணி சென்றுள்ளது. அதில் இருந்து 15 வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேட்டிங் வரிசை
இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பேட்டிங் வரிசையையே பிசிசிஐ அறிவித்துள்ளது. ஓப்பனிங்கிற்காக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகிய வேறு எந்த வீரும் ஓப்பனங்கிற்காக சேர்க்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் சுப்மன் கில் - ரோகித் சர்மா தான் ஓப்பனிங் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
நீடிக்கும் குழப்பம்
பேட்டிங் வரிசை தெளிவாக உள்ள நிலையில் பவுலிங் படை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் என 5 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் யாரெல்லாம் ப்ளேயிங் 11ல் இடம்பிடிக்க போகிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
அஸ்வின் - ஜடேஜா
இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருந்தாலும், இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 ஸ்பின்னர்களையும் பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி அவர்கள் இருவரின் பெயருமே 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
15 வீரர்கள்
ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சாஹா, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்