ரவி சாஸ்திரி பதவிக்காலம்
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தான் கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கோலியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மீண்டும் அவரையே பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. ஆனால் அவரால் இந்திய அணிக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட வாங்கித் தரமுடியவில்லை. இதனால் அவரை மீண்டும் பயிற்சியாளராக்க பிசிசிஐ விரும்பவில்லை.
புது பயிற்சியாளர்
வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே, ஆஸ்திரேலியவைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை அணுகி பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
காலக்கெடு விதிப்பு
இந்நிலையில் அதற்கு ஒரு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக அக்டோபர் 26ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல பேட்டிங் கோச், பவுலிங் கோச், பீல்டிங் கோச், தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவர் பதவிக்கு தலைவர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 3ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
டிராவிட் நிபந்தனை
ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்பட சம்மதம் தெரிவித்துவிட்டதால், வேறு யாரும் விண்ணப்பிக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. எனினும் ராகுல் டிராவிட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தான் பணியாற்றுவேன் எனத்தெரிவித்துவிட்டார். இதனால் இந்திய அணி வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.