முக்கிய போட்டி
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகின் முன்னணி அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடர்களில் வீழ்த்திய இந்தியா, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் வரலாற்று வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. ஏனென்றால் இதுவரை ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க அணியை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தியதில்லை. இதுவரை தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ள 20 டெஸ்ட்களில் 3 போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
டெஸ்ட் அணி அறிவிப்பு
இந்நிலையில் இந்த முறை வெற்றிகளை குவிக்க தரமான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 19 பேர் கொண்ட இந்த அணியில் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகின்றனர். ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.
கடைசி வாய்ப்பு
அஜிங்கியா ரகானேவின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்ட போதும், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் மற்றொரு சீனியர் வீரரான சட்டீஸ்வர் புஜாராவும் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். இவர்கள் இருவரின் ஃபார்ம் மிக மோசமாக இருக்கும் சூழலில் இந்த தொடர் வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர்கள்
மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பிங்கில் வழக்கம் போல ரிஷப் பண்ட், விருதிமான் சாஹா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து தொடரில் கலக்கிய அக்ஷர் பட்டேலுக்கும் காயம் காரணமாக வாய்ப்பு கொடுக்கவில்லை.
வேகப்பந்துவீச்சாளர்கள்
வேகப்பந்துவீச்சாளர்களில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்து முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணி
விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விருதிமான் சாஹா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்