வெற்றியை துரத்தும் வீரர்கள்
ஐபிஎல் பரபரப்பு ஒரு பக்கம் இந்திய அணியினரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணி வீரர்களும் வெற்றியை விடாமல் துரத்திக் கொண்டுள்ளனர். நித்தம் நித்தம் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது இந்த ஐபிஎல் 2021. ஒவ்வொரு அணியும் தங்களது சிறப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.
ஒப்பந்த பட்டியல்
இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஏ+ கிரேடில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் நீடிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டு வருமானமாக 7 கோடி ரூபாய் அளிக்கப்படும்.
ஹர்திக் முன்னேற்றம்
அக்டோபர் 2020 முதல் செப்டர்பர் 2021 வரை இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக காயம் காரணமாக சிறப்பான போட்டிகளை அளிக்காத நிலையிலும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏ கிரேடுக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு ஆண்டு வருமானமாக 5 கோடி ரூபாய் கிடைக்கும்.
பட்டியலில் இல்லாத நடராஜன்
இதனிடையே கடந்த சில மாதங்களில் சிறப்பாக விளையாடாத மணீஷ் பாண்டே பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நடராஜனும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதனிடையே சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் முதல் முறையாக இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஷர்துல் தாக்கூர் பி கிரேடில் இடம் பெற்றுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் இடம்பிடிப்பு
இந்நிலையில் கடந்த ஆண்டில் முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், தொடர்ந்து சி கிரேடிலேயே நீடிக்கிறார். நவ்தீப் சைனி, ஹனுமா விஹாரி ஆகியோரும் கிரேட் சி-யில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு வருமானமாக 1 கோடி ரூபாய் கிடைக்கும்.