மும்பை: ஐபிஎல் போட்டிகள் குறித்த மிக முக்கிய அறிவிப்பை பிசிசிஐ சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், இரண்டாவது போட்டியில், மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சுமாராக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்தது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் அக்.8ம் தேதியோடு லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைகின்றன. அன்றைய தினத்தின் இரு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஹைதராபாத் மும்பைக்கு எதிராகவும், பெங்களூரு அணி டெல்லிக்கு எதிராகவும் மோதுகின்றன. இதோடு லீக் போட்டிகள் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிசிசிஐ தரப்பில் ஒரு முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அக்.8ம் தேதி அன்று நடைபெறும் இரண்டு போட்டிகளும், இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும் போது, முதல் போட்டி பிற்பகல் 3:30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும். இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு தொடங்கி, இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே அறிவிப்பில், 2023 - 2027 வரையிலான ஐபிஎல் மீடியா உரிமைக்கான டெண்டர் குறித்த அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக்டோபர் 25ம் தேதி இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்ட பிறகு, டெண்டர் குறித்த அறிவிப்பு உடனேயே வெளியிடப்படும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
போட்டி நேரம் மாற்றப்பட்டது ஏன் என்பதற்கான தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் நெட் ரன் ரேட் குழப்பத்தை தவிர்ப்பதற்கே இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.