டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இறுதி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன. 3வது போட்டி வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது. தொடர்ந்து மார்ச் 4ம் தேதி இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
இதையடுத்து இரு அணிகளுக்கிடையில் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் வரும் மாதம் 12ம் தேதி துவங்கி 20ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று விளையாடும் 19 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் டிவாட்டியா உள்ளிட்ட புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் ஆட்டம்
இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவான், சூர்யகுமார் உள்ளிட்ட வீரர்கள் தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடர் மார்ச் 14ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
பிசிசிஐ உத்தரவு
இந்நிலையில் டி20 அணியில் இடம் பெற்றுள்ள ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் தொடரையொட்டி வரும் மார்ச் 1ம் தேதி அகமதாபாத்திற்கு வரவேண்டும் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் கொரோனாவை முன்னிட்டு புதிய பயோ பபளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.