டி20 உலகக்கோப்பை
ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்தாண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தயாராக தொடங்கிவிட்டன.
பாகிஸ்தான் எச்சரிக்கை
இதனிடையே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு விசா வழங்கும் என உத்தரவாதம் தர வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஷன் மணி ஐசிசியிடம் கோரியிருந்தார். மேலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் இந்தியா விசா வழங்க எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும், இல்லையென்றால் தொடரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என ஐசிசிக்கு எச்சரிக்கை விடுத்தது.
பிசிசிஐ பதில்
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்திய அரசு நிச்சயம் விசா வழங்கும் என ஐசிசியிடம் பிசிசிஐ உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாகிஸ்தான் ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
தொடர் பிரச்னை
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அரசியல் ரீதியான பிரச்னைகளால் இரு நாட்டு அணிகளும் எந்தவொரு தனிப்பட்ட போட்டிகளிலும் ஈடுபடாமல் உள்ளது. இதனால் ஐசிசி நடத்து உலகக்கோப்பை தொடரிலேயே இரு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக பாகிஸ்தான் அணி 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைகாக இந்தியாவுக்கு வருகை தந்தது. இந்நிலையில் இரு அணிகளும் வரும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் தனிப்பட்ட டி20 தொடரில் மோத திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.