டெல்லி : நிதிப் பற்றாக்குறையால் தவித்து வந்த வடகிழக்கு மாநில கிரிக்கெட் அமைப்புகளின், ரஞ்சி ட்ராபி தொடர் செலவுகளை ஏற்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது பிசிசிஐ. செய்வதறியாது தவித்து வந்த வடகிழக்கு மாநில அணிகள், இதனால் உற்சாகமடைந்துள்ளன. இதனையடுத்து, ரஞ்சி ட்ராபி தொடருக்கு தங்கள் அணிகளை தயார் செய்யும் வேலைகளை தொடங்குவார்கள் என தெரிகிறது.இந்த ஆண்டு முதல் ரஞ்சி ட்ராபி தொடரில் ஒன்பது மாநிலங்களை சேர்ந்த புதிய கிரிக்கெட் அணிகள் சேர்க்கப்பட்டன. அதில் பாண்டிச்சேரி, பீகார், உத்தரகாண்ட் தவிர்த்து மற்ற ஆறு அணிகள் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநில அணிகள் ஆகும். இந்த ஒன்பது புதிய அணிகளிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. அதிலும், வடகிழக்கு மாநில அணிகளுக்கு நிதிபற்றாக்குறை மட்டுமல்லாது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிரிக்கெட் ஆடும் தன்மைக்கு ஏற்ற மைதானம் இல்லாத நிலையும் இருந்தது. வீரர்கள் தேர்ந்தெடுப்பதிலும் போதிய தெளிவு இல்லாமல் இருந்தனர். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளின்அடிப்படையில், அவசர கோலத்தில் இந்த புதிய அணிகள் சேர்க்கப்பட்டதால் தான், இந்த குழப்பங்கள் ஏற்பட்டதாக பலரும் கூறி வந்தனர். இதை அடுத்து, வடகிழக்கு மாநில கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் குறைகளோடு பிசிசிஐ கிரிக்கெட் செயல்பாடுகள் தலைவர் சபா கரீமை சந்தித்தனர். அந்த சந்திப்பின் முடிவில் வடகிழக்கு மாநில அணிகளுக்கு யோசனைகளும், உத்தரவாதங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆறு வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலும், வயதுவாரியாக பிரிக்கப்பட்ட அணிகள் ஒவ்வொன்றுக்கும் பயிற்சியாளர், உடற்பயிற்சி நிபுணர், பிசியோதெரபி நிபுணர் ஆகியவர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை இனி பிசிசிஐ ஏற்கும். இந்த அணிகள் தங்கள் பயிற்சியாளர், நிபுணர்கள் உள்ளிட்ட தேவைகளை, பிசிசிஐ-இடம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில், பிசிசிஐ அவர்களுக்கு தேவையான ஆட்களை அனுப்பி வைக்கும். அதே போல, இந்த அணிகள் பட்ஜெட் தயாரித்து தெளிவான செலவுகளை குறிப்பிட்டு பிசிசிஐ-க்கு தெரிவிக்க வேண்டும். அந்த தொகை நியாயமாக இருந்தால் பிசிசிஐ நிதியை வழங்கும். இந்த வகையில், ஒவ்வொரு அணிக்கும் வருடத்திற்கு 4 முதல் 5 கோடிகள் வரை செலவாகும் என தெரிகிறது. நிதிப் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும், உள்கட்டமைப்புகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. சிக்கிம் அணி தனது போட்டிகளை சிலிகுரி என்ற இடத்தில உள்ள மைதானத்தில் விளையாடும். அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து, தொடர் தொடங்கும் முன்பு பயிற்சியில் ஈடுபட மேகாலயா அணி கவ்ஹாத்தி நகருக்கு செல்ல உள்ளது. பல அணிகள், கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த மாநிலங்களில் தான் பயிற்சி பெற அதிக வசதிகள் கிடைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளன. பிற மாநில வீரர்கள், இந்த மாநிலங்களில் விளையாட விருப்பம் தெரிவித்தால் அதிக சம்பளம் கொடுக்கும் நிலை இருப்பதால், அதை தவிர்த்து விடுமாறு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ, பாதி கிணறு தாண்டிவிட்டன இந்த புதிய அணிகள்...மீதியையும் தாண்டுவார்களா என பார்ப்போம்.