லண்டன்: கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவது குறித்து பிசிசிஐ முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, மான்சஸ்டரில் உள்ள Emirates Old Trafford கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கவிருந்தது.
இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகத்தில் பரவும் கொரோனா தொற்று காரணமாக, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஐபிஎல் எனும் அசுரன்.. ஓனர்களின் பாக்கெட்டை நிரப்ப காவு வாங்கப்பட்டதா கடைசி டெஸ்ட் போட்டி?
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் வீரர்கள் யாருமே நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இரு அணி நிர்வாகங்களும் நேற்று முதல் தொடர்ந்து ஆலோசித்து வந்தன. அதேசமயம், இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும், 5 வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதனால், தொடரின் முடிவு என்ன? இந்தியா கோப்பையை வெல்கிறதா? அல்லது தொடர் டிராவாகுமா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களை திக்குமுக்காடச் செய்தன.
இந்நிலையில், பிசிசிஐ இதுகுறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும் (எப்போ.. அடுத்த வருஷத்துலயா??). பிசிசிஐ எப்பொழுதும் வீரர்களின் பாதுகாப்பில் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாது. இந்த கடினமான காலங்களில் எங்களுடன் ஒத்துழைத்து, நிலைமையை புரிந்து கொண்டதற்காக ECB க்கு BCCI நன்றி தெரிவிக்கிறது. ஒரு சுவாரஸ்யமான தொடரை முடிக்க முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.