கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியா நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரான ஜக்மோகன் டால்மியாவுக்கு (வயது 75) நேற்று இரவு 9 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.
இதய சிகிச்சை நிபுணர் அடங்கிய மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் ஜக்மோகன் டால்மியா அனுமதிக்கப்பட்டபோது அவரது மகன் அபிஷேக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியும் உடனிருந்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஜக்மோகன் டால்மியாவின் இதய வால்வில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதனை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.