முரளி விஜய் நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களில் முரளி விஜய் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெறும் இரண்டு டெஸ்டை காரணமாக வைத்து அவரை அணியில் இருந்து நீக்கினர். அதன் பின் அதே இங்கிலாந்தில் எசக்ஸ் கவுன்டி அணியில் இணைந்து ரன் குவித்து தன்னை நிரூபித்தார் அவர்.
வெ.இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு இல்லை
அடுத்து தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மனவருத்தத்தில் இருக்கும் முரளி விஜய், ஒரு பேட்டியில் தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் தேர்வுக் குழுவில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை என கூறினார். எந்த காரணமும் சொல்லாமல் என்னை விலக்கி விட்டார்கள் என மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
[காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்]
விளக்கம் அளித்தனர்
இது பற்றி தேர்வுக் குழு தலைவர் பிரசாத்திடம் கேட்ட போது, "முரளி விஜய் நீக்கப்பட்ட பின் என்னுடன் மற்றொரு தேர்வாளராக இருக்கும் தேவாங் காந்தி அவரிடம் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக கூறியுள்ளார்" என கூறினார். பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "விஜய் எசக்ஸ் அணியோடு எப்படி ஒப்பந்தம் செய்தார்? அதை அவர் சொல்வாரா? பிசிசிஐ தான் தேர்வுக் குழுவிடம் பேசி ஏற்பாடு செய்தது. நீக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவர் எசக்ஸ் அணியில் சேர்ந்து ஆடினார்" என ஆதாரத்தோடு பேசினார்.
தேர்வுக் குழு மீது புகார்கள்
தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. முக்கியமாக கருண் நாயரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்து களத்தில் இறங்க வாய்ப்பு அளிக்காமல் வெளியே உட்காரவைத்து விட்டு திடீரென அவரை டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து முரளி விஜயும் குற்றம்சாட்டியுள்ளார்.