இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு மோசமான நிலையை எட்டியது. இடையே 2012இல் சிறிய அளவிலான ஒரு தொடர் மட்டும் நடைபெற்றது. அந்த காலத்தில் பிசிசிஐ சுமார் ஆறு இருதரப்பு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட ஒப்புக்கொண்டு பின்னர் மறுப்பதாக பாகிஸ்தான் புகார் கூறியது.
இழப்பீடு கொடுக்க தேவையில்லை
சுமார் 447 கோடி இழப்பீடு கேட்டு ஐசிசியில் வழக்கு தொடர்ந்தது பாகிஸ்தான். பிசிசிஐ தாங்கள் ஆறு இருதரப்பு தொடர்களில் ஆடுவதாக அளித்தது முன்வரைவு கடிதம் மட்டுமே. புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்ல என கூறியது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ கூறிய வருமான வழிமுறைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினர். இதன் முடிவில் பிசிசிஐ எந்த இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை எனக் கூறி தீர்ப்பு அளித்தது ஐசிசி.
வழக்கு காசை கொடுங்க
பாகிஸ்தானுக்கு இந்த தீர்ப்பு பெரிய அடியாக அமைந்தது. மேலும் அடி கொடுக்கும் விதமாக, தங்களை வழக்கில் இழுத்து விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை ஒரு கை பார்க்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதன் படி, வழக்கு நடத்திய செலவுகளுக்கு உண்டான பணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அளிக்க வேண்டும் என ஐசிசியிடம் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சிக்கலில் பாகிஸ்தான்
தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி, இழப்பீடு வழக்கே தேவையற்றது. தான் பதவியில் இல்லாத போது போடப்பட்ட வழக்கு, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணலாம் என புலம்பி வருகிறார். அவருக்கு இழப்பீடு வழக்கு செல்லாது என முன்பே தெரிந்து இருக்கிறது. தற்போது, அவரை மேலும் புலம்ப வைக்கும் விதமாக பிசிசிஐ வழக்கு நடத்திய காசை கேட்டுள்ளது. பிசிசிஐ இந்த வழக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உள்ளது. வீம்புக்கு போட்ட வழக்கால், பாகிஸ்தான் கிரிக்கெட் தேவையற்ற இன்னலுக்கு ஆளாகியுள்ளது.