இலங்கை தொடர்
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு சீனியர் வீரர்கள் ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்களுக்கும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
குழப்பம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இந்திய பி அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டு வந்தது. எனினும் அதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அணி வீரர்களின் பட்டியல் வெளியிடும் போதும் கூட பயிற்சியாளர் குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட வில்லை. இதனால் பிசிசிசிஐ வேறு திட்டம் ஏதேனும் போட்டுள்ளதா என்ற கேள்வி சுற்றி வந்தது.
கங்குலி அறிவிப்பு
இந்நிலையில் ராகுல் டிராவிட் தான் இலங்கை தொடரில் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்பதை பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷாவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் தற்போது U19 அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரி.ன் பயிற்சியில் பல்வேறு இளம் வீரர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரே சர்வதேச தொடருக்கு பயிற்சியாளராக வந்திருப்பது வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி அட்டவணை
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.