ஐபிஎல் 2021
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, "இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
உறுதி செய்யாத பிசிசிஐ
இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை உறுதி செய்யவில்லை.
25 நாட்கள் ஷெட்யூல்
இந்தநிலையில், அமீரகம் சென்றுள்ள கங்குலி உள்ளிட்ட பிசிசிஐ நிர்வாகிகள், அமீரக நிர்வாகிகளுடன் ஐபிஎல் தேதிகளை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ANI-யிடம் பேட்டி அளித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர், "அமீரக கிரிக்கெட் வாரியத்துடனான பேச்சுவார்த்தை உண்மையில் சிறப்பாக நடைபெற்றது. ஐபிஎல் 2021 தொடர் மீண்டும், செப்.19ம் தேதி தொடங்கும். அதே நேரத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும். மொத்த போட்டிகளையும் 25 நாட்களில் முடிப்பதே பிசிசிஐ நோக்கமாகும்.
மாற்று வீரர்கள்
வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள். இது குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒருவேளை சிலரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், மாற்று நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எனினும், இப்போதைக்கு அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இதுகுறித்து வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ தொடர்ந்து பேசி வருகிறது. வீரர்களை மீண்டும் ஐபிஎல்-ல் விளையாட வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆலோசித்து வருகிறோம். சில நட்சத்திர வெளிநாட்டு வீரர்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனில், அவர்களுக்கு மாற்றான வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தப்படும்" என்றார்.