யூஏஇயில் நடத்த திட்டம்
கடந்த மார்ச் 29ம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்த ஆண்டே நடத்தி முடிக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதி கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், யூஏஇயில் தொடரை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுப்பு
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை தொடரை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடந்த மாதங்களிலேயே தெரிவித்துவிட்ட நிலையில், இதுகுறித்து இறுதி முடிவை வெளியிடாமல் ஐசிசி கூட்டம் போட்டு தாமதித்து வருவதாக பிசிசிஐ குற்றம் சாட்டி வருகிறது.
தாமதிக்கும் ஐசிசி
டி20 உலக கோப்பை தொடரை தள்ளிவைக்கும் முடிவு குறித்து கடந்த கூட்டங்களிலேயே இறுதி முடிவை ஐசிசி அறிவிக்கும், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்த அட்டவணையில் ஐபிஎல் 2020 போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என்ற கனவுடன் பிசிசிஐ காத்திருந்த சூழலில் இந்த அறிவிப்பு தாமதத்தால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது.
ஐபிஎல் குறித்த தெளிவு கிடைக்கும்
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி பிரதிநிதிகள் கூட்டத்தில் டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பது குறித்து ஐசிசி இறுதி முடிவை எடுக்கும் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதன்மூலம் அந்த அறிவிப்புக்கு பிறகு ஐபிஎல் தொடர் குறித்தும் ஒரு தெளிவு ரசிகர்களுக்கு கிடைக்கும். ஐபிஎல் இந்தியாவிலா, யூஏஇயிலா எங்கு நடக்கும் என்பதும் தெரியவரும். முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் குறித்தும் தெளிவு கிடைக்கும்.