2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்க இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் பிசிசிஐக்கு மட்டும் 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
பிசிசிஐ திட்டம்
அந்த நஷ்டத்தை தவிர்க்க பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தும் முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒரு கட்டமாக 2020 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தால் அந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வமாக இருந்தது.
டி20 உலகக்கோப்பை தள்ளி வைப்பு
நீண்ட நாட்களுக்கு பின் 2020 டி20 உலகக்கோப்பை தொடரை 2021க்கு தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி. அதன் மூலம், ஐபிஎல் தொடருக்கு தேதிகள் கிடைத்தது. பிசிசிஐ உற்சாகம் அடைந்தது. செப்டம்பர் இறுதியில் ஐபிஎல் தொடரை துவக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெளிநாட்டில் ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது. விரைவில் ஐபிஎல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கல்
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன் ரத்து செய்யப்பட்ட தொடர் ஒன்றை நடத்துமாறு அந்த ரத்து செய்யப்பட்ட தொடரால் நஷ்டம் அடைந்தவர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஐபிஎல் தொடருக்கான திட்டமிடல்கள் சிக்கலில் உள்ளன.
இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
மார்ச் மாதம் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் நடக்க இருந்தது. அந்த தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு சமயம் அந்த தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சாத்தியமா?
அந்த தொடரை ஐபிஎல் தொடருக்கு முன் நடத்த வேண்டும் என்றால் அதற்கு இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணியை கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகளுடன் தயார் செய்ய வேண்டும். பின் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர வேண்டும்.
தனி திட்டமிடல்
ஐபிஎல் தொடருக்காக இந்திய அணியை தயார் செய்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை நடத்த வேண்டும் என்றால் அதற்கு தனியாக திட்டமிட வேண்டும். அது தற்போது உள்ள சூழ்நிலையில் கடினமானதாகும். அதனால், பிசிசிஐ கடும் அழுத்தத்தில் உள்ளது.