சுற்றுப்பயண திட்டம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கேப்டன்ஷிப் போட்டி
விராட் கோலி, ரோகித் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கை சுற்றுப்பயணத்தை யார் வழிநடத்துவது என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இளம் வீரர்கள் கொண்ட அணி என்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல்-ல் ரோகித் சர்மாவுடன் பல்வேறு சமயங்களில் பாண்ட்யா இணைந்து பணியாற்றியுள்ளார். மற்றொரு புறம் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
கேப்டன் யார்?
இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன்ஷிப் போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான் தான் வெற்றி பெற்றுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவிற்கு துணை கேப்டன் பதவி கூட கொடுக்கப்படவில்லை. அந்த பதவியையும் மற்றொரு சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னதான் அணி முழுவதும் இளம் படை ஆக்கிரமித்து இருந்தாலும், அவர்களை சீனியர் வீரர் வழிநடத்தினால் தான் சரியாக இருக்கும் என பிசிசிஐ யோசித்துள்ளது.
வீரர்கள் விவரம்
ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா
வலைப்பயிற்சி பவுலர்கள்: இஷான் பொரேல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீட் சிங்