டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 4வது போட்டி பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் கடுமையான குவாரன்டைன் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தளர்த்த பிசிசிஐ கோரிக்கை
ஏற்கனவே சிட்னியில் குவாரன்டைனில் இந்திய வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தற்போது இரண்டாவது குவாரன்டைன் வைக்கப்படக்கூடாது என்றும் அதில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. வீரர்கள் உணவு அறை உள்ளிட்டவற்றில் ஒன்றாக இருக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கேட்டுள்ளது.
பிசிசிஐ எழுத்துப்பூர்வ கடிதம்
இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் நிலையில், முறையாக இதுகுறித்து கடிதத்தை பிசிசிஐ தற்போது எழுதியுள்ளது. குவாரன்டைன் விதிமுறைகளை தளர்த்தவும் அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் கேட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
நடைமுறைப்படுத்த கோரிக்கை
இரு போர்டுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இருமுறை கடினமான குவாரன்டைன் ஏற்படுத்தப்படும் என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளின்போது ஏற்படுத்தப்பட்டது போன்ற பயோ பபள் விதிமுறைகளை பிரிஸ்பேனிலும் நடைமுறைப்படுத்தவும் கேட்டுள்ளது.
ஐபிஎல் பயோ பபள்
யூஏஇயில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகளின் போது வீரர்கள் ஹோட்டல் உணவு விடுதியில் ஒன்றாக இருக்கவும் மற்றும் மீட்டிங்குகளின்போது ஒன்றாக இருக்கவும் வழி செய்யப்பட்டிருந்தது. தற்போது பிரிஸ்பேனிலும் அத்தகைய சுதந்திரத்தை வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ தனது கடிதத்தில் கேட்டுள்ளது.