மும்பை: முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பிசிசிஐ வழங்குகிறது. கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த ஆண்டு வெங்சர்க்கருக்கு வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நவம்பர் 21ம் தேதி மும்பையில் நடைபெறும் பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் வெங்சர்க்கர் இந்த விருது அளித்து கெளரவிக்கப்படுவார்.
மேலும் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ் குமார், சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1976ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இந்திய அணியில் இணைந்திருந்தவர் வெங்சர்க்கர். அவருக்கு பாராட்டுப் பத்திரம், கோப்பை, ரூ. 25 லட்சம் ரொக்கம் ஆகியவை பரிசாக அளிக்கப்படும்.
58 வயதான வெங்சர்க்கர், மும்பை அணிக்காகவும் ஆடியுள்ளார். இவர் 1975ம் ஆண்டு நடந்த இராணி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக மும்பை அணியின் சார்பில் அபாரமான சதம் போட்டு வெளிச்சத்திற்கு வந்தவர். 1976ம் ஆண்டில் அவர் இந்திய அணியிலும் இடம் பெற்றார்.
1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் வெங்சர்க்கரும் இடம் பெற்றிருந்தார். அதேபோல 1985ல் நடந்த வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆடியுள்ளார். இந்திய அணிக்கு 10 டெஸ்ட் போட்டிகளுக்கு இவர் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கர்னல் என்று சக வீரர்களால் அன்புடன் அழைக்கப்படும் வெங்சர்க்கர், பிசிசிஐயின் திறன் ஆய்வு வளர்ச்சிக் கமிட்டியின் தலைவராக 3 ஆண்டு காலம் இருந்துள்ளார். மேலும் கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவராகவும் 2006 முதல் 2008 வரை இருந்துள்ளார்.