2021 டி20 உலகக்கோப்பை
2021 டி20 உலகக்கோப்பை நடத்தும் உரிமை இந்தியா வசம் உள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பிசிசிஐ - ஐசிசி இடையே கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இந்திய அரசிடம் உலகக்கோப்பை தொடரில் ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்தில் வரி விலக்கு பெற்றுத் தர வேண்டும் என ஒரு விதி இருந்தது.
18 மாதங்களுக்கு முன்பு
அந்த விதிப்படி டி20 உலகக்கோப்பை தொடங்க 18 மாதங்களுக்கு முன்பாகவே பிசிசிஐ, இந்திய அரசிடம் இருந்து விதி விலக்கு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அது குறித்து மத்திய அரசுக்கு பல முறை கடிதங்கள் எழுதியும் வரி விலக்கு கிடைக்கவில்லை.
ஒப்பந்த விதிகள்
அந்த 18 மாதங்கள் டிசம்பர் 2019 உடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போது ஐசிசி ஒப்பந்த விதிப்படி 2021 உலகக்கோப்பை நடத்தும் உரிமையை இந்தியாவிடம் இருந்து நீக்க முடியும். அதை சொல்லி இப்போது பிசிசிஐயை மிரட்டி வருகிறது ஐசிசி.
கால அவகாசம்
பிசிசிஐக்கு கடந்த ஏப்ரல் 17 வரை மீண்டும் கால அவகாசம் அளித்தது ஐசிசி. ஆனால், பிசிசிஐயால் வரி விலக்கு பெற முடியவில்லை. ஏப்ரல் 13 முதல் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதை காரணமாக வைத்து பிசிசிஐ மீண்டும் கால அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதாரத்தை காட்டுங்கள்
கால அவகாசம் கேட்ட பிசிசிஐயிடம், இதுவரை வரி விலக்கு பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்டு இருக்கிறது ஐசிசி. 2018, 2019இல் இந்திய அரசுக்கு எழுதிய ஆறு கடிதங்களை பிசிசிஐ ஆதாரமாக காட்டி உள்ளது. அப்படி இருந்தும் கால அவகாசம் அளிக்க மறுத்து உள்ளது ஐசிசி.
மிரட்டல்
இன்னும் உலகக்கோப்பை நடத்தும் உரிமையை பறிக்காவிட்டாலும் அதை வைத்து பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது ஐசிசி. உலகக்கோப்பை நடத்தும் உரிமையை நாங்கள் பறித்தால் இந்தியாவால் அதை எதிர்க்க முடியாது என ஐசிசி அதிகாரி ஒருவர் ஈமெயில் அனுப்பி மிரட்டி உள்ளார்.
இந்தியாவை சார்ந்து ஐசிசி
ஐசிசியின் பெரும்பகுதி வருமானம் இந்திய ரசிகர்களை நம்பியே உள்ளது. ஐசிசி தொடர்களில் கூட இந்தியா ஆடும் போட்டிகளில் தான் வருமானம் அதிகம். தொலைக்காட்சி உரிமையில் கூட இந்தியாவின் தொலைக்காட்சி உரிமை தான் அதிகமாக கிடைக்கும்.
அதிர்ச்சிப் பின்னணி
அப்படி இருக்கும் நிலையில், ஐசிசி, பிசிசிஐ உடன் மோதல் போக்கை கடைபிடிப்பது பற்றி அதிர்ச்சிப் பின்னணி ஒன்று கூறப்படுகிறது. தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷான்க் மனோகர், முன்னாள் பிசிசிஐ தலைவர் ஆவார். அவருக்கும், தற்போதைய பிசிசிஐ லாபியில் உள்ளவர்களுக்கும் முன்பே பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.
தொலைக்காட்சி ஒப்பந்தம்
அதை ஒட்டியே ஐசிசி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம், இந்தியாவில் தொலைக்காட்சி ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ள ஐசிசி குறிப்பட்ட காலத்திற்குள் இந்தியாவில் இரண்டு தொடர்களை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. அதனால், இந்தியாவில் தொடரை நடத்தாமல் போனால் ஐசிசிக்கும் சிக்கல் எழும்.
முடிவு என்ன?
ஷஷான்க் மனோகரின் பதவிக் காலம் வரும் ஜூலை 2020 உடன் முடிவடைகிறது. அதன் பின் ஐசிசி - பிசிசிஐ இடையே ஆன உறவு சுமூகம் ஆகும் என கருதும் பிசிசிஐ அதிகாரிகள் தற்போது அமைதியாக உள்ளனர். 2021 உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறும் என உறுதியாக உள்ளது பிசிசிஐ.