சென்னை: பந்து வீச்சு சர்ச்சைக்கு ஆளாகியுள்ள, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் கேகேஆர் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் 'லீக்' போட்டியில் சுனில்நரினின் பந்துவீச்சு குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டது. அவர் விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக கூறி தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சமீபத்தில் நடந்த உலககோப்பையிலும் அவர் ஆடவில்லை.
இதற்கிடையே சுனில் நரின் தனது பந்துவீச்சு பரிசோதனையை நிரூபித்தார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அங்கீகரித்தது.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சுனில்நரின் பந்துவீச்சை இன்னும் அங்கீகரிக்கவில்லை. மீண்டும் பந்துவீச்சு பரிசோதனை செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து சுனில்நரின் பந்துவீச்சு குறித்து சென்னையில் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை போரூரிலுள்ள, ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் உள்ள சோதனை மையத்தில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையின் முடிவை பொறுத்தே சுனில்நரின் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியுமா? என்பது தெரியவரும்.