ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மோசமாக உள்ள காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அறிவிப்பு?
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க ஐசிசி அமைப்பானது பிசிசிஐ-க்கு இன்று வரை கால அவகாசம் வழங்கியிருந்தது. இதற்கு பதிலளித்துவிட்டு, இன்றே ஐபிஎல் அட்டவணைகளையும் வெளியிடப்படும் என தகவல் கசிந்துள்ளது.
திட்டம் என்ன?
தற்போது வரை 27 போட்டிகள் மற்றும் 3 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆனால் அமீரகத்தில் செப்டம்பரில் நல்ல வெயில் இருக்கும் என்பதால் டபுள் ஹெட்டர்ஸ்களை தவிர்க்க பிசிசிஐ யோசித்து வருகிறது. எனவே அதற்கு ஏற்றவாறு அட்டவணைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
டி20 உலகக்கோப்பை
ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் செப்.19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற்றால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் டி20 உலக்கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்ததான் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே ஐபிஎல் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி20 உலகக்கோப்பைக்கான பபுள்களை பிசிசிஐ மாற்ற வேண்டும்.