பயோ-பபுளில் வீரர்கள்
இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, தற்போது மும்பையில் அவர் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்த பிறகு, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்று, பிறகு அங்கு 10 நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.
ஆல் ரவுண்டர்
இத்தொடரில், பிசிசிஐயின் முக்கிய கவனிப்பாக இருக்கப் போவது ஷர்துள் தாகூரின் பெர்ஃபாமன்ஸ் தான். காரணம், பிசிசிஐ இப்போது ஒரு ஆல் ரவுண்டரை தேடிக் கொண்டிருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாட முடியாமல் போனதற்கு காரணம், அவரால் பந்து வீச முடியாதது தான். ஆனால், பாண்ட்யாவால் பேட்டிங் செய்ய முடியும், சிக்ஸர்களை பறக்க விட முடியும், பாய்ந்து ஃபீல்டிங் செய்யவும் முடியும். ஆனால் இந்திய நிர்வாகமோ அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது பேட்டிங்கோடு சேர்த்து பவுலிங்கையும் தான்.
தனி ஃபோகஸ்
இதற்கு காரணம், பாண்ட்யாவின் நீண்ட கால முதுகு வலி. அவரால் பேட்டிங் செய்ய முடியும், ஆனால் பவுலிங் பண்ண முடியாது. அதனால் தான் அவரை கழட்டிவிட்டது பிசிசிஐ. இப்போது இலங்கைக்கு எதிரான டூருக்கு இந்திய 'பி' அணியுடன் செல்ல தயாராகி வருகிறார். இதனால், அணி நிர்வாகம் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களுக்கான வலையை விரித்துள்ளது. இதில், பிசிசிஐ-யின் முதல் பார்வை ஷர்துள் தாகூர் மீது தான். ஐபிஎல் ஆனாலும் சரி.. சர்வதேச போட்டி என்றாலும் சரி, எப்போது இறக்கிவிட்டாலும் சிக்ஸர்களை பறக்கவிடுகிறார் ஷர்துள். 10 பந்துகளை சந்தித்தால் அதில் குறைந்தபட்சம் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் வந்துவிடுகிறது. பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார். இதனால் ஷர்துள் மீது தனி ஃபோகஸ் வைத்துள்ளது பிசிசிஐ.
நிரூபித்துவிட்டார்
இதுகுறித்து, இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூட, "தன்னால் ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட முடியும் என்பதை ஷர்துல் தாகூர் நிரூபித்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது செயல்பாடு அட்டகாசமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா அபார திறமை வாய்ந்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் முதுகு வலிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு திரும்பி வருவது எளிதானது விஷயம் அல்ல. ஆகையால், இப்போதைக்கு அவர் தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால், இப்போது நாம் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டர்களை உருவாக்க வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் நிச்சயம் சில வீரர்கள் இருப்பார்கள்" என்றார்.
டீசண்ட் இன்னிங்ஸ் போதும்
அதற்காவே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஷர்துள் சேர்க்கப்பட்டுள்ளார். நிச்சயம் இவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதாக செஞ்சுரி எல்லாம் அடிக்கத் தேவையில்லை. டீசண்ட்டாக மேட்சுக்கு 40 ரன்களும், மூன்று விக்கெட்டுக்கும் எடுத்தாலே, டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை ஷர்துள் நிச்சயம் சீல் செய்துவிடலாம்.