உலக சாதனை
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பாக விளையாடி 75 ரன்களை அடித்த கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10, 273 ரன்களை கடந்து உலகில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை முந்தி மிதாலி ராஜ் பெருமை பெற்றுள்ளார்.
2வது வீராங்கனை
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இரண்டிலுமே இந்தியர்கள்
இந்நிலையில் மிதாலியின் சாதனை குறித்து பிசிசிஐ புகழாரம் தெரிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் சச்சின் மற்றும், சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் மிதாலி என்று பெருமைக்கொண்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவ வீராங்கனை
தமிழ் குடும்பத்தை சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்கு பிறந்த மிதாலி ராஜ், தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். மித்தாலி ராஜ் ஒருநாள் போட்டிகள் இல்லாமல் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.