5ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்களில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி கொண்டு இமாலய சாதனையுடன் இந்தியா திரும்பியுள்ளனர் இந்திய அணி வீரர்கள். இந்நிலையில் வரும் 5ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான தொடர்கள் துவங்கவுள்ளன.
சென்னையில் முதல் போட்டி
முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. வரும் 5ம் தேதி இதன் முதல் போட்டி சென்னையில் துவங்குகிறது. சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகளும் அகமதாபாத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
பிசிசிஐ திட்டம்
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடர்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்ற பிசிசிஐயும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ ஆலோசனை
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் குஜராத் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பாதுகாப்பான முறையில் ரசிகர்களை அனுமதிப்பதன்மூலம் அதையடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.