தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தென்னாப்பிரிக்க வாரியம் உறுதியளித்ததை அடுத்து, இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதி புறப்படுகிறது. இன்று அதற்கான வீரர்களை தேர்வு செய்யும் குழு அவசர அவசரமாக நடத்தப்படுகிறது. இதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவும் உடன் அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவசர கூட்டம்
இந்த கூட்டத்தில் வீரர்கள் தேர்வு மட்டுமின்றி கேப்டன்கள் மாற்றம் குறித்தும் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன. அதாவது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் இருந்தால் தேவையில்லாத குழப்பங்கள் வரும் என்பதால் ஒரே கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்தது. அதன்படி ரோகித் சர்மாவிடம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியின் கேப்டன் பதவியும் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 கேப்டன்சி
வரவிருக்கும் தென்னாப்பிரிக்க தொடர் முதல் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா தான் கேப்டன்சியில் ஈடுபடவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் கூட்டம் தான் இன்று நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரகானேவுக்கும் முடிவு கட்டப்படவுள்ளது. அவரிடம் உள்ள துணைக்கேப்டன் என்ற பதவியை ரோகித் சர்மாவிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காகவே டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வுக்குழுவுக்கு ரோகித் சர்மா அழைக்கப்பட்டுள்ளார்.
புதிய திட்டம்
2022ம் ஆண்டு முழுவதுமாக இந்திய அணிக்கு மொத்தம் 9 ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ளன. அதிகப்படியாக டி20 தொடர்களே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த சமயத்தில் ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தால், அவர் உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு கால அவகாசம் கொடுத்தது போன்று இருக்கும். டி20 அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரோகித் சர்மா தனது முதல் தொடரையே சிறப்பாக வென்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.